Friday, December 28, 2007

புலம் பெயர் தமிழர்களின் இருப்பு (கனடா)


புலம் பெயர் தமிழர்களின் இருப்பு (கனடா)

இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத விடயமாக புலம் பெயர்வு என்பது நடந்து கொண்டிருக்கின்றது. புலம் பெயர்வு என்பது ஆதிகாலம் தொட்டு இன்று வரைக்கும் நிகழ்கால நிகழ்வாகவே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான புலம் பெயர்வானது மனித இனங்களுக்குள் மட்டுமினறி விலங்கினங்களுக்கும் பறவையினங்களுக்கும் மற்றும் உயிர்வாழ் இனங்களுக்கு இடையில் நிகழ்ந்து வருவதைக் காணமுடிகின்றது. இப்புலப்பெயர்வு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கோ, அல்லது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கோ, அல்லது ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊரிற்கோ இருக்கலாம். இது ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வரும் விடயமாககும். இவ்வாறான புலம் பெயர்வுகள் நிகழ்ந்து கொண்டிருப்பதனால் மனித இனம் ஏராளமான மாற்றங்களைப் பெற்றுவருகின்றது. இவ்வாறான மாற்றங்களால் மனிதன் பெற்றமை ஏராளம். அதேவேளையில் மனிதன் இழந்தமையும் ஏராளம் எனலாம். இந்த வகையிலே மனிதன் புலம் பெயர்தலுக்குப் பல காரணங்கள் உள்ளன. இவைகளில் முக்கியமானவையாக கருதப்படுவன பின்வருமாறு:

1. பொருளாதார ஆதாரமின்மை
2. இயற்கை சீற்றங்கள், இயற்கை வளமின்மை
3. அரசியல் காரணங்கள் (மதம், சாதி, கட்டுப்பாடுகள்)
4. படையெடுப்புக்கள்
5. இன்னொரு நாட்டின் மேல் இருக்கும் சொந்த விருப்பு

கடந்த பல நூற்றாண்டுகளாக தமிழன் அதிகமாக, பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றான். இந்த வகையிலே கனடா நாட்டை எனது ஆய்வுக்காக எடுத்துக் கொள்கின்றேன். கனடா நாட்டில் புலம் பெயர் தமிழர்களின் இருப்பு என்ற வகையிலே தமிழினத்தின் கலை, மொழி, பண்பாடு, விழுமியங்கள், சமுதாயமீளுருவாக்கம், பொருளாதாரம், கல்வி போன்றவற்றை முன்னிறுத்திப் பார்க்கவேண்டும். பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட மக்களோடு அல்லது குழுவோடு தொடர்புடையது. இந்த வகையிலே தமிழர் பண்பாடானது கனடா நாட்டில் கடந்த இருபத்தைந்து வருடங்களாக வாழ்கின்ற மக்களால் பாதுகாத்து வரப்படுகின்றது. கனடா நாட்டிற்கு புலம் பெயர்ந்த தமிழர்களில் அனேகமானோர் இலங்கையைச் சேர்ந்த தமிழர்களாவார்கள். மற்றையவர்கள் இந்தியா, மலேசியா போன்ற நாட்டைச் சேர்ந்தவர்களாவார்கள். இவ்வாறு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் 250,000 பேர் மட்டில் கனடா நாட்டில் வாழ்கின்றனர். இதில் 200,000 போர் மட்டில் GTA Area பகுதியில் வாழ்கின்றனர். இத்தொகையான மக்கள் கனடாவிற்கு 20 வருடங்களாக தமது புலப்பெயர்வினை மேற்கொண்டு தஞ்சம் புகுந்துள்ளனர். இதனை மேற்கோள் காட்டி “Canadian Tamil Chamber of Commerce” வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கருத்துக்கணிப்பு காட்டப்படுகின்றது.

“The Canadian Tamils of Sri Lankan origins (“Tamils”) are one of the fastest growing visible minority groups in the Greater Toronto Area. Canada is now home to more than 250,000 Tamils, of which approximately 200,000 live in the GTA.

The history of Tamils in Canada goes back to the 1940s, when a few hundred Tamils migrated to Canada. The 1983 communal riots in Sri Lanka precipitated the mass exodus of Tamils, with over 500,000 finding refuge in countries such as Canada, United Kingdom, Australia, Germany, France and Switzerland.

The vast majority of Tamils immigrated to Canada in the last 20 years. Canada is now home to the largest Tamil population outside of Sri Lanka. Within this short period of time, Tamils have established a mounting presence in multiple aspects of Canadian life: Business, academic, political and social. Then Tamil business community has gown in leaps and bounds, with over 2,000 Tamil-owned businesses in the GTA.” (Page 02; Fact and Figures: Census 1996 and 2001)

கனடா பல்லின மக்கள் இணைந்து வாழும் நாடாகும். இந்த வகையிலே கனடாவிற்கு புலம் பெயர்வினை மேற்கொண்டவர் வரிசையில் சீனர், வியட்நாமியர், இந்தியர், கிழக்கு ஐரோப்பியர் மற்றும் இலங்கை ஈழத்தமிழர் எனலாம். கனடாவிற்கு தஞ்சம் புகுந்தவர்களில் எண்ணிக்கையாலும், காலத்தாலும் கூடியவர்கள் சீனர்களே ஆவார். புலப்பெயர்வினால் தமது புகலிடங்களைப் பெற்றவர்கள் தங்கள் தங்களது மொழி, கலை, பண்பாட்டு மரபுகளையும் காத்து வருகின்றனர். இவ்வாறான பின்னனியில் கனடாவில் வாழும் ஈழத்தமிழர் வாழ்வியல் நிலைப்பாடுகளையும் அவர்;களின் இருப்பு பற்றி இவ்வாய்வுரையில் ஆராயவுள்ளேன்.
கனடா நாட்டில் குடியேறியுள்ள பல்வேறுபட்ட இனங்களில் தமிழினமும் தமது வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்து வருவதைக் காணலாம். வணிகம், ஊடகத்துறை, அரசியல், கல்வி, சமயம், மொழி, கலை, பண்பாடு போன்ற விடயங்களில் முக்கியமானவை ஆகும். இவ்வாறான விடயங்களில் முன்னேற்றம் அடைந்த கனடா வாழ் தமிழினம் தம்மை பொருளாதாரரீதியல் பலப்படுத்திக்கொண்டு தமக்கென்றோர் அடையாளத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். பெரும்பாலான மக்கள் தமக்கென்ற சொந்த வீடுகளையும், வணிகரீதியில் வர்த்தக தாபனங்களையும், உணவு விடுதிகள், தொழிற்சாலைகள், கோவில்கள் பேன்றவற்றையும் கொண்டுள்ளனர். இவ்வினம் குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைந்தமை பெருமைக்குரிய விடயமாகும். கனடிய நீரோட்டத்pல் பல்லின மக்களின் மத்தியில் கடின உழைப்பினால் முன்னேறி வருகின்ற இனமாக தமிழினம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வணிகம்:


கனடாத்தமிழர்களின் வணிகம் என்கின்ற வகையிலே இவர்களின் செயற்பாடுகள் மேலோங்கியிருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கிறது. கனடாவாழ் தமிழ் மக்களின் வணிகப் பண்பாட்டுச் சிறப்பை அறிந்து கொள்ள கனடா நாட்டின் ரொரன்ரோ நகரில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களை எடுத்துக்கொள்வோம். பொதுவாக தங்கநகை வணிக நிறுவனங்கள், புடைவைக் கடைகள், தளபாடக் கடைகள், தமிழ் ஒளிவட்டுக் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் மளிகைக் கடைகள் பேன்றவற்றைப் பெரும்பாலும் கொண்டமைந்துள்ளன. இதனைவிட தமிழர் வாழ்வியலுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்கும் நிலையில் கனடிய தமிழர் வணிகம் அமைந்துள்ளது. இவற்றுக்கு எடுத்துக்காட்டாக கனடிய சூழலில் வெளிவருகின்ற வர்த்தக கையேடுகளை பார்ப்போமானால் தமிழன் வழிகாட்டி, வணிகம், தமிழர் மத்தியில், நம்மவர் மட்டில் போன்ற வர்த்தக கையேடுகள் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வருகின்ற கையேடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் வணிக விளம்பரங்களை ஆண்டு தோறும் தாங்கிவருகின்றது.


இதனைவிட பிற கனடிய நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றுக்கும் மேலாக கனடியப் பெரும்பாகத்தில் சிறிய, பெரிய கைத்தொழில் ஆலைகளையும் அமைத்து, தொழில் வழங்குநர்களாகவும், தொழிலதிபர்களாகவும் தமிழர் இருந்து வருகின்றனர். வீடு வாங்குதல், விற்றல், நிதி முகாமைத்துவம், வாழ்க்கை, போக்குவரத்து, வணிகம் போன்றவற்றுக்கான காப்புறுதி, போன்ற துறைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர். இதனைவிட வருடாவருடம் கனடிய சூழலில் நடைபெறுகின்ற வர்த்தகக் கண்காட்சிகள் முக்கியமானவையாகும். இவ்வாறான வணிகம் பிற சமூகத்துடன் இணைந்தும், வர்த்தகப் போட்டிகளுக்கு மத்தியிலும் செயல்படுவதைப் பார்க்கும் போது, எதிர்காலத்தில் பெரும் வணிக நிறுவனங்களை நிறுவி பொருள் வளம் சேர்கக் கூடியதன்மை புலம்பெயர் தமிழர் வணிகரீதியில் காணக்கூடியதாகவுள்ளது.

ஊடகத்துறை:


ஊடகத்துறை வாழ்வில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை எனலாம். அந்த வகையிலே தமிழர் ஊடகத்துறையானது கனடிய சூழலில் முக்கிய பங்கை வகிக்கின்றது. கனடாவில் பத்திரிகைத்துறை, வானொலி – தொலைக்காட்சி, இலக்கிய வெளியீடுகள் திரைப்படங்கள் போன்றவை முக்கியமானவையாகும். கனடா நாட்டில் பல்வேறு மகாணங்களில் பல பத்திரிகைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ரொறன்ரோவில் தமிழ் நாளிதழ்கள் இல்லாவிட்டாலும் வார இதழ்கள் வெளியாகின்றன. இவ்வாறு வெளியாகின்ற பத்திரிகைகளில் ஈழமுரசு, தமிழர் செந்தாமரை, உதயன், முழக்கம், நம்நாடு, முரசொலி முதலிய இலவச வார இதழ்கள் வெளியாகின்றன. இவற்றைவிட உலகத்தமிழர், ஈழநாடு போன்ற பத்திரிகைகள் விற்பனையாகின்றன. இலவசப்பத்திரிகைகள் மக்களிடத்தே போதிய வரவேற்பை பெற்றிருக்கவில்லை என்றே கூறலாம். இதற்கு காரணம் அதிக அளவு விளம்பரங்களை தாங்கி வருவதையே காரணம் எனக்கொள்ளலாம். பொதுவாக இவ்விதழ்களை வயது வந்தவர்கள் பொரும்பாலும் பார்த்து வருகின்றனர். இதன் சிறுவர், இளையோரின் வாசிப்பு பங்கு மிகமிகக் குறைவாகவே காணப்படுகின்றது எனலாம்.

இதனைப்போலவே வானொலி – தொலைக்காட்சிகளின் பங்கு எவ்வாறு இருக்கின்றது எனப்பார்ப்போமே ஆனால் இரண்டு இலட்சத்திற்கு மேல் தமிழர் வாழும் இந்நாட்டில் எத்தனைபேர்; வானொலிகளையும் தொலைக்காட்சிகளையும் கொண்டுள்ளனர் எனப்பார்க்க வேண்டியுள்ளது. கனடாவில் ஐந்து வானொலிகளுக்கு மேல் இயங்கிக்கொண்டிருக்கின்றது. அதே போன்று தொலைக்காட்சி சேவையும் நான்கிற்கு மேலாக இயங்கிவருகின்றது. வானெலி – தொலைக்காட்சிகளில் கவிதை, நாடகம், சிறுகதை, சந்திப்புக்கள், தாயகவலம், செய்திகள், விளையாட்டுக்கள், சிறுவர் மற்றும் வயோதிபர் நிகழ்வுகள் போன்றன இடம் பெறுகின்றன. இந்த வகையிலே பல்வேறு வகையான நிகழ்வுகளை ஒலிபரப்பி போதுமனா வகையில் தமிழர்களுக்கு சேவையாற்றுகின்றன.


இலக்கிய வெளியீடுகள் என்கின்ற பார்வையில் கனடா நாட்டில் வாரத்திற்கு ஒன்றென்கின்ற அளவில் படைப்பாளிகளின் வெளியீடுகள் சிறுகதைப் புத்தகமாகவே, கவிதை, இலக்கியம், சமயம், சஞ்சிகை, ஆண்டு மலர்களாகவே வெளியாகிவருகின்றன. கனடா நாட்டில் புலம் பெயர்ந்து வந்த இத்தமிழர் தமது ஊர்களின் பெயராலும், தமது தாயக பாடசாலைகளின் பெயராலும் படைப்பாழிகள் கழகம், எழுத்தாளர் இணையம், தமிழிசைக் கலாமன்றம், பேன்றவற்றையும் பழைய மாணவர் சங்கங்கள் போன்றவற்றையும் அமைத்து பலவிதமான படைப்புக்களை வெளியிடுகின்றன. இதுவரை ஏறத்தாழ பெருந்தொகையான புலம் பெயர் இலக்கியங்கள் வெளியாகிவிட்டன, இன்னும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன எனலாம்.
திரைப்படங்கள் என்ற பார்வையிலே தமிழகப் திரைப்படங்களுக்கும் நாடகங்களுக்கும் மிகுந்த வரவேற்பு இருக்கின்றது. ஒவ்வொரு நாளைக்கு ஒரு திரைப்படம் என்ற அளவில்லாது இரண்டு முன்று என்கின்ற வீதத்தில் இளைவட்டுக்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் பார்த்து வருகின்றனர். இத்திரைப்படங்கள் தமிழகத்தில் தமிழர் பண்பாட்டை சீரழிக்கின்றது என்பதைவிட இவ்வகையாக திரைப்பட மோகம் கனடா நாட்டிலும் பரவி வருகின்றது. இதற்கு ஆதாரமாக திரையிசை நடனம் பலவிதமான அரங்குகளிலும் நடந்தேறிவருகின்றமையே ஆகும். இவ்வகையான திரையிசை நடனங்கள் மிகுந்த செல்வாக்கைப் பெற்று வருகின்றமையை காணக்கூடியதகாவுள்ளது. ஆனால் தமிழ்த் திரைப்படங்கள் வீட்டில் தமிழ் மொழியை தக்கவைத்துக் கொண்டிருப்பதற்கு ஓர் கருவியாக அமைகின்றது. கனடா நாட்டில் திரைப்படக் கலைத்துறையும் தனது முயற்சிகளை மேற்கொண்டு பல குறும்படங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது.

அரசியல் :


கனடிய அரசியல் நீரோட்டத்தில் தமிழினம் கால் பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கனடாவில் வசிக்கும் தமிழர் தொகை ஏறத்தாழ இரண்டு இலட்சம் எனக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது. இந்த வகையிலே தமிழினத்தின் கனடிய அரசியல் நுழைவு குறைவாகவே காணப்படுகின்றது. கனடாவின் மைய, மாநில, மாநகர அரசியலில் பங்குபெற வேண்டும். தமிழர்களில் பலர் கனடிய அரசியலில் பங்கு கொள்வதற்கு தகமையுடையவர்களாக இருக்கின்றனர். அந்த வகையிலே சீனர், சீக்கியர் வரிசையில் தமிழர்களும் பங்கு கொண்டு தமிழினத்தின் அவலங்களுக்கும், உரிமைக்குரலுக்கும் வகைசெய்ய வேண்டும். இவ்வாறான சாத்தியங்கள் தமிழர்களின் ஒற்றுமையிலேதான் உருவாகும்.

கல்வி :


புலம்பெயர்ந்து வாழும் கனடிய தமிழ் சமூகம் கனடிய மண்ணில் பல்லின மக்கள் வாழும் பகுதிகளில் கல்வியில் சாதனை படைக்க கூடியதாக முன்னேற்றம் கொண்டுள்ளனர். பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் மாணவர்கள் சாதனை செய்யுமளவிற்கு தமது கல்வியில் காணப்படுகின்றனர். கனடிய மாணவர்கள் பெரும்பாலும் சட்டம், மருத்துவம், வணிகம், சமூகவியல், கணணி, அச்சகம், படத்தயாரிப்பு, சிறுகைத்தொழில், போன்ற பல்வேறு துறைகளில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர் எனலாம். இவர்களின் கல்வியின் தரம் கனடிய தேசிய நீரோட்டத்தின் தரத்தில் முன்னேற்றமைந்த தொன்றாகும் எனக்கூறலாம்.

சமயம் :


கனடா நாட்டில் பல்லின நாட்டு மக்கள் வாழ்கின்றமையினால் அவர்கள் தத்தம் மதங்களுக்குரிய வழிபாட்டு முறைகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையிலே கனடியச் சூழலில் தமிழ்ப்பண்பாட்டு இறை வழிபாடு குறிப்பிடத்தக்கது. கனடியச் சூழலில் பெரும்பாலான சைவக்கோவில்களை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நாட்டில் இன்னும் பெருவாரியான கோவில்கள் தோன்ற சாத்தியக்கூறுகள் இருந்து வருகின்றன எனலாம். கனடாவில் தோன்றியுள்ள சைவக்கோவில்களில் அனைத்து சமய விழாக்களும், நோன்புகளும், திருவிழாக்களும், சிறப்பாகவே நடைபெற்று வருகின்றன. இவற்றைவிட கோவில்களில் சைவமும் தமிழும் தக்க வைப்பதற்காக சைவ தமிழ் வகுப்புக்களை நடாத்தி வருகின்றனர். இருந்த போதிலும் கனடிய இளம் தலைமுறையினருக்கு சமய நாட்டமும், தமிழ் மொழி நாட்டமும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. கனடாவில் மிக முக்கியமான அமைப்பாக கோவில்கள் இடம் பெற்றுள்ள இடவசதிகளை பார்க்க வேண்டியுள்ளது. கனடா சூழலில் சில கோவில்களே இடவசதி கொண்டு கோவிலுக்கான கட்டமைப்பினை கொண்டு அமையப்பெற்றுள்ளன. பல கோவில்கள் தொழிற்சாலைகள், வர்த்தகப் பாவனையிடங்கள் போன்றவிடங்களில் அமையப்பெற்றுள்ளன. சில கோவில்கள் காலப்போக்கில் தம்மை மாற்றியமைத்துக் கொண்டுள்ளன. இக்கோவில்களுக்கு பெருந்தொகையான மக்கள் சமூகம் அளிப்பதுண்டு. தாயகத்தில் நடந்தேறிய சிறு திருவிழாக்கள் தொடக்கம் பெருவிழா கொண்டு இங்கு நடந்தேறி வருகின்றது. இத்திருவிழாவிற்கு போகும் பத்தர்கள் தமது பண்பாட்டு உடையணிந்து செல்வது வழக்கமாகும். இத்திருவிழாவிற்கு உபயகாரர்களாக பொதுமக்கள், தமிழர் வியாபார தாபனங்கள், வர்த்தகப்பிரமுகர்கள் போன்றோர் இடம்பெறுகின்றனர். இவ்வகையான சைவக்கோவில்கள் தமிழர்களின் மத வளர்ச்சிக்கு போதிய பங்களித்தாலும், வியாபார நோக்குடன் செல்லும் பார்வையும் சில கோவில்களில் காணப்படுகின்றன என்பது உண்மையான விடயமாகும். காலப்போக்கில் தம்மை பொருளாதராரீதியல் வலுப்பெற்றபின்னர் இத்தகைய போக்கை மாற்றியமைக்கும் என நம்பலாம். இவற்றைவிட தமிழர்களின் பிறமதங்களான கிறஸ்தவ மதங்களும், முஸ்லிம் மதங்களும் கனடியச் சூழலுக்கு ஏற்றவகையிலே தமது மதவளர்ச்சிக்கும், வழிபாட்டிற்கும், முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். இந்நாட்டில் கிறிஸ்தவ மத்தினருக்கு உதவிகளை வழங்கியதன் பெயரால் சகல வசதிகளையும் பெற்று தமிழிலேயே பூசைகளை நடாத்திவருகின்றனர். இதனைப் போன்றே மற்றைய இனத்தவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. பொதுவாக கனடிய நீரோட்டத்தில் புலம் பெயர் தமிழினம் தமது சமயங்களை தம்முடன் இணைத்து செயற்பட்டு வருகின்றது.

மொழி:


பண்பாட்டின் எடுத்துக்காட்டாக மொழி விளங்குகின்றது. கனடாத் தமிழரது மொழி வளர்ச்சியானது குறிப்பிடத்தக்க நிலைப்பாடானது மொழியினூடகவே ஓர் இனம் தன்னை அடையாளம் காட்டுகின்றது. கனடியச் சூழலில் தமிழ் மொழியை காத்துவருவதில் கனடிய அரசும் தமிழர் சமூக அமைப்புக்களும் முதன்மை காட்டிவருகின்றன. கனடிய அரசின் மாநில அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில் மழலையர் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை தமிழ் மொழி கற்பிற்கப்படுகின்றது. பல்கலைக்கழகம் புகுமுக வகுப்புக்குரிய திறமைச் சித்தி பெறுவதற்குரிய வாய்ப்பும் தமிழ் மாணவர்களுக்கு உள்ளது. இவற்றைவிட அரச அலுவலகங்கள், பாடசாலைகள், முதலான பொதுவிடங்களில் தமிழில் மொழி பெயர்ப்பு வசதிகளும் வழங்கப்படுகின்றது. இவற்றைவிட அரச வெளியீடுகள், துண்டுப்பிரசுரங்கள், அறிவித்தல்கள் போன்றனவும் தமிழிலும் வெளியிடப்படுகின்றன.
தமிழ் மொழியைக் கற்பிக்க சில தமிழ் நிறுவனங்கள் முன்னெடுத்து நடாத்திவருகின்றன. தமிழ் மொழி கற்பித்தல் எவ்விதமாக இருந்தாலும் வீட்டு மொழியாக பல வீடுகளில் ஆங்கில மோகம் காணப்படுவது தமிழ் மொழிக்குரிய கவலைக்கிடமான நிலமைதான் காணப்படுகின்றது. வீட்டு மொழியாக தமிழ் பேசுபவர்களின் பிள்ளைகளிலும், ஆங்கிலம் பேசுபவர்களின் பிள்ளைகளிலும் பண்பாட்டுரீதியல் பல வேறுபாடுகள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கதென்றேயாகும். நாளடைவில் இவர்களின் பண்பாடு தமிழ்ப்பண்பாட்டில் இருந்து விலகி வேற்றினப்பண்பாட்டு சாயல் காணப்படும் நிலமை ஏற்படும். கனடியச் சூழலிலே தமிழ் மொழியானது தனது அடையாளத்தை தக்வைக்கின்ற நிலமையிலேயே இருக்கின்றது.

கலை:


தமிழர்களின் கலைவிழாகள் எண்ணிக்கையால் உயர்ந்தே காணப்படுகின்றது. தாயகத்தில் கூட நடந்தேறாதளவு கலை விழாக்கள் கனடிய புலம் பெயர் நாட்டில் நடைபெறுகின்றன எனலாம். கனடியச் சூழலில் பல எழுச்சி தரும் கலைவிழாகள், தாயகப் பின்புலத்தை தாங்கிவரும் கலைவிழாக்கள், திரையிசை, சினிமா நட்சத்திர கலைவிழாக்கள் போன்றனவும் அரங்கேற்றங்கள், சங்கங்களின் விழாக்கள், பழையமாணவர் விழாக்கள் போன்றனவும் நடைபெற்றுவருகின்றன. இவற்றைவிட சமய அமைப்புக்கள், கலைக்கழகங்கள், இசை – நடனக் கல்லூரிகள் போன்றனவும் ஆண்டுதோறும் விழாக்களை நடாத்திவருகின்றன. இவ்வகையான விழாக்கள் புலம் பெயர்ந்து கனடியச் சூழலில் பல்கலாச்சார மக்களுடன் வாழும் தமிழனத்தினருக்கு தமிழப் பண்பாட்டை அறிவுறுத்துவனவாகவும், நினைவூட்டுவனவாகவும் அமைகின்றன.

இவற்றைவிட கனடிய மண்ணில் பிறந்த தமிழ் குழந்தை தொடங்கி புலப்பெயர்வினால் வந்து குடியேறிய குழந்தை தொட்டு தமிழ் இசையில் ஆர்வம் செலுத்தி வருகின்றது. இங்கு வாழும் இளம் சந்ததியினர் பெரும்பாலும் கர்நாடக சங்கீதத்தையும், பரதநாட்டியத்தையும், பல தமிழ்ப்பண்பாட்டு இசைக் கருவிகளையும் வாசிப்பதிலும் பயிற்சி பெற்றும் ஆர்வம்காட்டியும் வருகின்றனர்;. பொதுவாக தமிழினத்தின் கலை முன்னிலையில் நிற்கின்றது. அதனைவிட கலை நிகழ்ச்சிகள் பொதுவாக எல்லாம் பண்பாடு சார்ந்தது என்று கூறாவிட்டாலும் காலத்தின் தேவைக்கு ஏற்ப தமது பண்பாட்டுக்குள் கலைகளைக் கொண்டு கலைநிகழ்வுகளை நடாத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பண்பாடு :


பண்பாட்டின் பல விழுமியங்களையும் செயற்பாடுகளையும் கொண்டமைந்த இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வந்து கனடிய சமுதாயத்தில் குடியேறியுள்ள தமிழ் மக்கள் தங்களது பண்பாட்டின் தன்மையை இழக்கவில்லை. புலம் பெயர்ந்து அன்னிய தேசத்தில் வாழ்ந்தாலும் தமது மொழி, கலை, கலாச்சாரம், விழுமியங்கள் போன்றவற்றை பாதுகாத்துக் கொண்டும் அடுத்து இளம் தலைமுறைக்கும் அதனைக் கடத்திச் செல்லுகின்றார்கள். எவ்வாறு இருப்பினும் ஓர் இனத்தின் அடையாத்தை இழக்காமல் இருப்பதற்கு மொழி முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த வகையிலே மொழியைக் காத்து அதனையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் கனடா வாழ் புலம் பெயர் தமிழர் சமுதாயத்திற்கு இருக்கின்ற கடமையாகும். இவற்றைவிட தமிழ் மக்கள் தமது உணவு, உடை போன்றவற்றில் எந்தவித மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை. காலநிலைக்கு ஏற்ப தமது பாவனைகளை மாற்றிக் கொண்டாலும் தமது தேவைகருதியும், கலைவிழாக்களிலும் பண்டிகைகளிலும் தமது பாரம்பரிய உடை, உணவுகளை உபயோகிக்கின்றனர் எனலாம். பொதுவாக புலம் பெயர் தமிழினத்தின் பண்பாடு கனடிய நீரோட்டத்தில் கலந்தாலும் தமிழினத்துடன் நிலைத்து நிற்கின்றது.

முடிவுரை:


ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வரும் புலம் பெயர்வு என்பது மனித இனத்திற்கு மட்டுமின்றி உயிர்வாழ் இனங்களுக்கே ஓர் பாரிய மாற்றத்தை தந்துவருகின்றது. இந்தவகையிலே பாரியளவில் உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் இனமாக தமிழினமும் கருதப்படுகின்றது எனலாம். எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தாயக ஏக்கத்துடன் தமது முயற்சிகளிலும் தம்மை புலம்பெயர்ந்த சூழலில் தமது இனத்தின் அடையாளத்தை நிலைநிறுத்தி அடையாளம் கண்டுககொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ளார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமேயாகும். கனடியத் தமிழரிடையே தமிழர் பண்பாட்டை, விழுமியங்களை, கலைகள், மற்றும் வணிகம் போன்றவற்றை எடுத்துக்காட்டும் எதிர்காலம் அமையும். தமிழர் தமது அடையாளத்தை இழக்காது தமிழ் பண்பாட்டுடன் கனடாவில் நிலைபெற்றிருக்க புலம் பெயர்ந்த மண்ணில் ஒற்றுமையை நிலைநாட்டி வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமையும் போது கனடிய மண்ணில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர் நிலையானது மேலும் சிறப்பாக அமையும் என நம்பலாம்.

April 29th 2007


உசாத்துணை

– References

Prepared by Adventa Strategies Inc. Emergence of the Tamil Community in the GTA: FACT AND FIGURES; Canadian Tamils’ Chamber of Commerce. www.ctcc.ca

Thursday, December 27, 2007

1983 – பின் ஈழத்தமிழர் அவலங்கள்: இலங்கை, இந்தியா

1983 – பின் ஈழத்தமிழர் அவலங்கள்: இலங்கை, இந்தியா

தமிழர் அவலங்கள் என்ற வகையிலே ஆயிரக்கணக்கான அவலங்களையும் இன்னல்களையும் தழிழர்கள் பல்வேறுபட்டரீதியல் அனுபவித்து வருகின்றனர். இலங்கை சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழன் ஏதோவொரு வகையில் அவலங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றான். அது இறந்தகாலம் தொட்டு நிகழ்காலம் வரையும் நடந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக 1983 ஆம் ஆண்டு மற்றும் அதன் பின்னர் தமிழர் அவலங்கள் என்று பார்பது தமிழர் அவலங்களையும் அதன் காரண காரணிகளையும் சரிவரப்பார்க முடியாது போய்விடும். அந்த வகையிலே தமிழர் அவலங்கள் என்று பார்க்கின்றபோது இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இன்று வரையும் தமிழர் எந்தவகையான சிக்கல்களை, சவால்களை எதிர் நோக்குகினறார்கள், எதில் வெற்றி கண்டுள்ளார்கள், இன்னும் எதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது என்று பார்பதிலேயே இக்கட்டுரை கவனம் செலுத்துகின்றது.

தமிழர் அவலங்கள் என்ற வகையிலே கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகின்ற அரசியல் நெருக்கடிகளே முக்கிய காரணங்கள் எனலாம். ஈழத்திலிருந்து கடந்த 25 ஆண்டுகளாக தமிழர் வெளியேற்றங்கள், இனக்கலவரங்கள், இராணுவ நெருக்கடிகள், கல்வித்தரப்படுத்தல்கள், போன்றன முக்கிய வரலாற்று அம்சமாக தமிழர் அவலங்களில் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றன. 1972 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசியல் மாற்றங்களால் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறையும் 1983 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இனக்கலவரங்களும், இராணுவக்கெடுபிடிகளும் தமிழர் அவலங்களில் முக்கியமானதாகும்.

இலங்கை சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் தமிழர் பல்வேறு விதமான தாக்கங்களை பெரும்பாண்மையின அரசிடமிருந்து எதிர் நோக்கும் நிலை காணப்பட்டது. சுதந்திரம் கிடைத்து ஒரு வருடத்தின் முன்னரே தமிழர்கள் பல பாதிப்புக்களைச் சந்தித்தனர்.


இக்கட்டுரையில் தமிழர் அவலங்கள் என்றவகையில் தமிழர் பிரதேசத்தில் குடியேற்றதிட்டங்கள், சட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள், தமிழர்களின் இனப்பிரச்சனையும் அதன் பின்னனியும், கல்வி ஒடுக்குமுறை, பயங்கரவாத தடைச்சட்டங்கள், இன்றைய நிலவரம், இனம் மற்றும் அடையாளம் அழிப்பு போன்றவற்றை முக்கியமாக குறிப்பிட்டுள்ளேன். இதனைவிட இக்கட்டுரையில் ஆண்டுகள், வீதங்கள், கணக்கெடுப்புக்கள், ஆட்சிக்கால அரசாங்கங்கள், இடப்பெயர் மாற்றங்கள் போன்ற முக்கியமானவற்றை குறிப்பிட்டுள்ளேன். இந்த கட்டுரையை எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட உசாத்துணை நூற்களின் பட்டியலையும் இக்கட்டுரையின் முடிவிலே இணைத்துள்ளேன். நான் மேற்கொண்ட ஆய்வானது மேற்குறிப்பிட்ட உசாத்துணை நூற்களின் தரவுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

தமிழ்ப் பிரதேசங்களில் குடியேற்றத்திட்டங்கள்:

1948 பெப்ரவரி 04 இல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்ப்பட்டது. சுதந்திர இலங்கையில் முதல்முதலில் கூடிய பாரளுமன்றம், ஒரு இலட்சம் தோட்டத்தெழிலாளரை நாடற்றவர்களாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தனர். இதுமட்டுமின்றி தமிழ்ப்பிரதேசங்களில் குடியேற்றங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்தையும் கொண்டு வந்தது. இக்குடியேற்றங்களால் தென்மேற்கு பகுதியில் சனச்செறிவு கூடியபகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் குடியேற்றப்பட்னர். 1948 இன் பின்னர் இரண்டு முக்கியமான குடியேற்றத்திடடம் அமுல் படுத்தப்பட்டது.

1. கல்லோயாத்திட்டம்
2. துரித மாகவலி அபிவிருத்தித்திட்டம்

1949 இல் பிரதமர் டி. எஸ். சேனநாயக்காவால் ‘கல்லோயா ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்தித்திட்டம்’ ஆரம்பித்து வைக்கப்பட்டது. பட்டினப்பாளை என்ற பாரம்பரியத் தமிழ்ப்பெயரே "கல்லோயா" என மாற்றப்பட்டது. இந்தப்பிரதேசத்தில் 44 குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 38 சிங்களக்குடியேற்றத்திட்டங்கள் ஆகும். மீதி 6 தமிழ்க்குடியேற்றத்திட்டங்களாகும். இவர்களுக்கு விவசாய நீர்பாசன வசதியற்றவர்களாக இருந்தனர். சிங்களப்பகுதி நீர்ப்பாசன வசதியை நம்பியிருக்க வேண்டிய நிலையில் குடியேற்றப்பட்டனர். இவர்களை 1956, 1958ல் ஏற்பட்ட இனக்கலவரங்களால் விரட்டியடிக்கப்பட்டும், மின்சியோர் கொல்லப்பட்டனர். இதன்பின்னர் இப்பிரதேசம் சிங்களமயமாக்கப்பட்டது.

இதனைப்போல வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டவிடம் வவுனியாவாகும். வவுனியா வன்னி மாவட்டத்தின் தென்பகுதியிலிருந்து ஒருகிராமமாகும்.
இங்கு பாவற்குளம் என்ற சிறு கிராமத்தின் குடியேற்றத்திட்டம் முக்கியமானதாகும். 1956ல் 595 சிங்களக்குடும்பங்களும் 463 தமிழ்க்குடும்பங்களும் அமர்த்தப்பட்டன. இதன் பின்னர் ஏற்பட்ட இனக்கலவரங்களால் தமிழ்க்குடும்பங்கள் விரட்டியடிக்கப்பட்டு இப்பிரதேசம் சிங்களமயமாக்கப்பட்டது.

கிழக்கில் 1956ல் அம்பாறை என்ற தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. இது 1961ல் விரிவாக்கப்பட்டு பின்னர் அம்பாறை மாவட்டம் என மாற்றம் செய்யப்பட்டது. அம்பாறை மாவட்டத்தின் முழுப்பரப்பளவு 4318 சதுரக்கிலோமீற்றர்கள். 1981இல் இருந்த சனத்தொகை பின்வருமாறு:

தமிழ் பேசும் முஸ்லிம்கள் 46.8%
சிங்களவர்கள் 30%
தமிழர்கள் 22.8%

இம்மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்களால் 1994ல் மேற்கொள்ளப்பட்ட குடிசனக் கணக்கெடுப்பின்போது இந்த மாவட்டம் சிங்களப் பெரும்பான்மையினத்தைக் கொண்டு காணப்பட்டது என கணக்கெடுக்கப்பட்டது. இப்போது இப்பிரதேசம் தமிழ் மாவட்டம் என்ற அடையாளத்தை இழந்துவிட்டது. இப்பிரதேசத்தின் அடையாள இழப்பிற்கு முக்கிய காரணியாக மகாஓயா, பத்தியத் தலாவை, தெஹியக்கிண்டிய பகுதிகள் இணைக்கப்பட்டதாகும். இவை தமிழர் அல்லாத பிரதேசமாகும்.

இவற்றைவிட தமிழர்பிரதேசங்கள் “புனித பிரதேசம்” என்ற பெயரினால் அரசாங்கத்தினால் அபகரிக்கப்பட்டது. இதனைவிட பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு தமிழர் வாழ்விடங்களாக பின்வரும் பிரதேசங்கள் காணப்பட்டன.

பெரிய நீலாவணை, கல்முனை, காரைதீவு, நிந்தாவூர், திரைக்கேணி, சம்பாந்துறை, அக்கறைப்பற்று, பொத்துவில், பாண்டிருப்பு போன்ற பிரதேசங்கள் காணப்பட்டன.
தமிழர் அவலங்கள் என்றவகையில் முக்கியமானதாக காணப்படுவது: குடியேற்றங்களும், கலவரங்கள் மூலம் துரத்தப்பட்டமையும், கொலை செய்யப்பட்டமையுமாகும். இதனைவிட முக்கியமாக காணப்பட்டது பெயர் மாற்றமாகும். இந்த வகையிலே தமிழ்ப்பிரதேசங்கள் பல சிங்களப்பெயர்கள் இடப்பட்டனவாகும். இவ்வாறு காணப்படும் பிரதேசங்களாவன பின்வருமாறு.

1. பார்வதி கிராமம் - பதவியா
2. முதலிக்குளம் - மொறவேவா
3. பட்டினப்பாளை - கல்லோயா
4. பெரியகுளம் - நமல்வத்த
5. புதுவைக்குளம் - சங்கரபுர
6. அம்பாள் ஏரி - அம்பாறை
7. மணல் ஆறு - வெலி ஓயா
8. பெரிய விளான்குளம் - மகாதிவுல்ஓயா
9. பனக்கட்டிமுறிப்பு - பென்னிககெற்யாவ

1977ல் வவுனியா மாவட்ட எல்லைப்பிரதேசப் பகுதியில் இரண்டு குடியேற்றங்கள் அமர்த்தப்பட்டன. இவ்வாறு அமர்த்தப்பட்டவர்களில் சிங்களவர்களான முன்னைநாள் குற்றவாளிகள் குடியமர்த்தப்பட்டனர்.

1987ல் இலங்கையின் வடகிழக்கில் உருவாக்கப்பட்ட குடியேற்றத்திட்டங்களில் துரித மாகவலி அபிவிருத்தித்திட்டம் முக்கியமானதாகும். இதற்கு உலக வங்கியிடமிருந்து பணம் வாங்கப்பட்டது என்பது முக்கியமானதாகும்.

1987ல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் வடமாகாணம் கிழக்குமாகாணம் இணைக்கப்பட வேண்டும் எனக்கூறியது. இவ்வொப்பந்தம் நடைமுறைக்கு வரமுன்னர் 1988ல் மணல் ஆறுப்பிரதேசம் அபிவிருத்திக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிங்களமக்கள் குடியமர்த்தப்பட்டனர்.

1988 ஏப்ரல் 14 இல் விடுத்த அரசாங்க அறிக்கையின்படி முல்லைத்தீவுப்பகுதியில் இருந்த மணல்ஆறு என்றவிடம் வெலிஓயா எனப்பெயர் மாற்றப்பட்டது. இது இலங்கையின் 26வது மாவட்டமாக பிரகடணப்படுத்தப்பட்டது. இக்காலத்தில் காணி அமைச்சராக காமினி திஸாநாயக்கா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரதேசத்தில் அவசர அவசரமாக 3364 சிங்களக்குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டனவாகும். இது 1988லும் 1989லும் நடைபெற்றதாகும். இங்கு குடியேறியவர்களின் விகிதாசரப்படி விபரம் பின்வருமாறு:

சிங்களவர்கள் 85%
முஸ்லீம்கள் 6%
தமிழர்கள் 5%

இதனைப்போன்றே தண்ணிமுறிப்புப் பகுதியில் இருந்து 3000 குடும்பங்களை பலவந்தமாக வெளியேற்றினார்கள். அவ்வாறு வெளியேற மறுத்த 29 குடிமக்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் 25 000க்கும் மேலான சிங்களக்குடிமக்கள் குடியமர்த்தப்பட்டனர். தண்ணிமுறிப்பு என்ற தமிழ்ப்பெயர் ஐனகபுர என மாற்றப்பட்டது. இக்குடியேற்றத்திற்குப் பொறுப்பாக இருந்த படைத்தளபதி ஐனகபெரேரா என்பவரின் பெயரினாலேயே இது மாற்றப்பட்டது.

1987 நவம்பர் மாதம் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 13வது சட்டதிருத்தம் முடிக்குரிய காணிகளை மாகாண அரசுகளின் பொறுப்பில் விட, மகாவலி அபிவிருத்தித்திட்டம் மட்டும் மத்திய அரசிடமே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகையினால் இதுவோர் அரசால் பொறுப்பேற்கப்பட்ட ஒரு குடியேற்றத்திட்டமாகும்.


1990 June மாதம் இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட போர்க்காலத்தில் தமிழர் நிலங்கள் இராணுவமுகாம் அமைப்பதற்கும், பாதுகாப்பு வலயம் என்ற பெயரிலும் அப்பகுதியை அண்டியிருந்த மக்கள் அகற்றப்பட்டனர். இவ்வாறு அகற்றப்பட்டவிடங்களாக பலாலி, லிங்கநகர் போன்றனவாகும்.

தமிழர்களின் நிலம் பல வழியிலும் அபகரிக்கப்பட்டதை விடவும் மோசமான நிலை 1995 அக்டோபரில் யாழ்ப்பாணத்தை விட்டு மொத்தமாக வெளியேறியபோது ஏற்பட்டது. சிங்களப்படைகளின் அட்டூழியங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அங்கிருந்த மக்களில் வயது முதிர்ந்தோர், நோயாளிகள், என்றிருந்த ஒரு சிலரைத்தவிர அனைத்து யாழ்மக்களும் ஒரே நாளில் இடம்பெயர்ந்து சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வன்னிப்பிரதேசத்தை வந்தடைந்தனர். இவர்கள் வன்னிப்பிரதேசத்தில் காடுகளிலும், மரநிழலிலும், மழையிலும், வெயிலிலும், உணவுக்கும், உடைக்கும், இருப்பிடத்திற்கும் அவலப்பட்டநிலை காணப்பட்டது.

சட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள்:

இலங்கை தமிழர், சிங்களவர் என்ற இரு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடாகும். 1948ல் இலங்கையடைந்த சுதந்திரம் சிறுபான்மைத் தமிழர்களின் சுதந்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது எனலாம். பாரளுமன்றத்தில் 2:3 பெரும்பான்மைப் பலம் இருந்ததால் அரசியல் சட்டத்தையே தமது வசதிக்கும், விருப்பத்திற்கும் ஏற்றவாறு மாற்றியமைக்கும் அதிகாரம் பெரும்பான்மையினருக்கு இருந்தது.

சுகந்திரத்திற்கு பின் பதவிக்கு வந்த டி.எஸ். சேனநாயக்காவின் அரசாங்கம் முதலில் எடுத்த நடவடிக்கையே தமிழர்களினது வாக்குப்பலத்தை பலவீனப்படுத்தியமையாகும்.
1949ல் முதல்முதலில் கொண்டுவரப்பட்ட “இலங்கைக்குடியுருமைச் சட்டம்” ஒரே இரவிலேயே மலையகத் தமிழர்கள் ஒரு இலட்சம் பேரை நடுத்தெருவிற்கு தள்ளப்பட்டனர். இவர்கள் தங்களது வாக்குரிமையையும் குடியுருமையையும் இழந்தனர். மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டமையினால் அந்தத் தொகுதிக்கு 30000 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 2500 ஆகக்குறைந்தது. இப்படி நாவலப்பட்டித் தேர்தற்தொகுதியில் 28000 ஆக இருந்துவந்த வாக்காளர்கள் சட்ட அமுலாக்கத்தின் பின்னர் 2000 ஆகக்குறைந்தது. இப்படிப்பட்ட வாக்காளர் குறைப்பினால் 1952ல் நடந்த தேர்தலில் 1948ல் இருப்பதைவிட 7 பாராளுமன்ற ஆசனங்கள் குறைவாக தமிழர்கள் பெற்றனர். அத்தோடு புதிய சட்ட மூலத்தினால் மேலும் 14 தொகுதிகளில் தமிழர்கள் தமது பலத்தையும் இழந்தனர்.

எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்கள் 1949ல் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கட்சியாக “தமிழரசுக்கட்சி” யை ஆரம்பித்தார். இவ்வாரம்ப காலத்தில் இவர் கருத்துக் கூறுகையில் “தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பேணப்பட்டு அவர்கள் சமத்துவமான பிரஜைகளாக மதிக்கப்படக் கூடிய தன்னாட்சி முறையே தமிழர்களுக்கு ஏற்றது.” என்றார்.

1956ல் எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்காவின் தலைமையில் இருந்த அரசாங்கம் “சிங்களம் மட்டும் அரசகருமமொழி” என்ற சட்டத்தை நிறைவேற்றியது. தொடர்ந்த குடியேற்றத்திட்டங்கள் என்ற பெயராலும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள் பறிக்கப்பட்டு சிங்களப்பிரதேசமாக ஆக்கப்பட்டது.

இவ்வாறான பின்னனியின் மத்தியில் பலவகையான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு கைவிடப்பட்டன. அவ்வாறு கைசாத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் முக்கியமானவையாக 1958 யூலை 26ல் பிரதமராகவிருந்த எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்காவுக்கும் தமிழரசுக்கட்சியின் தலைவராகவிருந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகத்திற்கும் இடையிலான பண்டா – செல்வா ஒப்பந்தம்.

இதனைப்போலவே 1983 – 1984 ஆம் ஆண்டுகளில் இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளவென சகல கட்சிகளையும் உள்ளடக்கிய மகாநாடுகள் நடத்தப்படடன. இவை எந்த முடிவையும் எடுக்காமலேயே முடிவடைந்தன.

அடுத்து 1985 யூலையில் தமிழ்க்குழுக்களும் (TULF, LTTE, EROS, PLOTE, EPRLF, TELO) இலங்கை அரசாங்கப்பிரதிநிதிகளும் வடஇந்தியாவில் பூட்டானின் தலைநகர் திம்புவில் கூடிய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் ஆவன:

1. தமிழர்கள் ஒரு தேசிய இனமென அங்கிகரிக்கப்பட வேண்டும்
2. தமிழர்கள் தாயகம் அங்கிகரிக்கப்பட வேண்டும்.
3. தமிழர்களது சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட வேண்டும்
4. எல்லாத்தமிழர்களினதும் குடியுருமையும் அடிப்படையும் உரிமைகளும் பேணப்படவேண்டும்.

இவ்வாலோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடைவெடிக்கையாக வவுனியாவில் 200 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்நடவடிக்கையால் இவ்வாலோசனை கைவிடப்பட்டது.

1987 யூலை 26 இல் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் செய்து கொண்ட ராஜீவ் - ஜே.ஆர். உடன்படிக்கை பல அழிவுகளுக்குப் பின்னர் மார்ச்சு 1990ல் இந்தியா திரும்பியது. இக்காலகட்டத்தில் தமிழீழப்பகுதிகளுக்கு வந்ந அமைதிப்படை தனது நோக்கத்திலிருந்து விலத்தி பல அழிவுகளைச் செய்தது குறிப்பிடத்தக்கது.

1989 செப்டம்பர் 13 இல் பிரேமதாசா அரசினால் சர்வகட்சிகளின் மாகநாடு ஒன்று ஆரம்பிக்கப்ட்டது. இதில் விடுதலைப் புலிகள் தவிர்ந்த 21 அரசியல் கட்சியைச் சேர்ந்த 69 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இது பலவருடங்களாக இழுத்தடிக்கப்பட நிலையில் எந்தமுடிவும் அற்ற நிலையில் முடிவடைந்தது.

1993 இல் பிரேமதாசா இறப்பிற்குப்பின் வந்த விஐயதுங்க தமிழர் பிரச்சனை என்பது வெறுமனே ஒரு பயங்கரவாதப் பிரச்சனை என்றும் இராணுவரீதியில் புலிகளை வென்றுவிட்டால் தமிழர் பிரச்சனை முடிந்துவிடும் என்று செயற்பட்டார்.

இதன்பின்னர் 1994ல் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதாக் கூறிக்கொண்டு வந்த சந்திரிக்கா அரசானது கடிதம் மூலமான பரிமாற்றத்தை ஏற்படுத்தியது. இது 02.09.1994 க்கும் 18.04.1995 க்கும் இடையிலான 6 மாதக் காலத்தில் ஏற்பட்டதாகும். ஆக மொத்தத்தில் 70 கடிதங்கள் பரிமாற்றப்படடன. இத்துடன் நாலு சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. ஆனால் எதுவுமே பலன் அழிக்கவில்லை.

டிசம்பர் 2002ல் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசபதிவிற்கு வந்தது. நாட்டின் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் 2002 ஏப்பிரலில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஏற்பட்ட போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து நோர்வே நாட்டின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்ப்படட்டனவாகும். இதுவும் எந்தவித பலனும் அழிக்கவில்லை எனவே கூறமுடியும்.

தமிழர்களின் இனப்பிரச்சனைகளின் முக்கிய ஆய்வு:

தமிழர்களின் இனப்பிரச்சனைகளின் அவலங்கள் என்றவகையிலே பல கசப்பான அனுபவங்களும், ஏமாற்றங்களும், பாரிய இழப்புக்களும், இனவொடுக்குமுறை, தொடர்ச்சியான பயங்கரவாதம், மற்றும் போர் போன்றனவே முக்கியமானவையாகும். அவற்றில் முக்கியமானவையாக கல்வி ஒடுக்குமுறை முக்கியமானதாகும்.

1960 வரை இலங்கையில் இருந்த பாடசாலைகள் பெரும்பாலும் இந்து, பௌத்த, கிறிஸ்தவ அமைப்புக்களின் மேற்பார்வையிலே இயங்கிவந்தது. 1960, 1961 இல் பெரும்பாண்மையான பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டனவாகும். இதனைத் தொடர்ந்து பாடப்புத்தகங்கள், பாடசாலை நிறுவாகம், ஆசிரியர் நியமனம், பாடசாலை நூலக நியமனம் போன்ற பலவிடயங்களில் தமிழ் மாணவர்களுக்கு கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணியாக சிங்கள மொழி அரசகரும மொழியாக அமைந்ததேயாகும். இதனைவிட பாடப்புத்தகங்களில் சிங்கள பௌத்த தேசியவாதத்தை வலுயுறுத்தியும் எழுதப்பட்டன. இதற்கு எடுத்துக்காட்டாக 1983 ஐனவரி 1ல் சனாதிபதியினால் கையளிக்கப்பட்ட பாடப்புத்தகத்தல் 1948ல் இலங்கை பெற்ற சுகந்திரம் சிங்களவர்களாலேயே பெறப்பட்டது என்றும் அது சிங்களவரால் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்களில் அரசின் அங்கீகாரத்துடன் செயற்படுவது நாட்டின் அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்துவதுடன் இனவாதத்தையும் காட்டிநிற்கின்ற விடயமாகும்.

1970ல் சிறிமாவோ அரசாங்கத்தினால் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை தெரிவுசெய்யும் முறை தொடர்பாக கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல். 1971ல் அரசாங்கம் கொண்டுவந்த சட்டத்தின்படி மருத்துவபீடத்திற்கு தெரிவு செய்யும் தமிழ் மாணவர்;களுக்கு குறைந்தபட்சம் 400 க்கு 250 புள்ளிகள் தேவையென்றும், சிங்கள மாணவர்களுக்கு 229 என்றும் சட்டப்படுத்தப்பட்டது. இரு தரப்பும் ஆங்கிலத்தில் தோற்றினாலும் இவ்விதியே பின்பற்றப்படும் எனப்பட்டது.

1972ல் மாவட்டங்களுக்கான ஒதுக்கீட்டுமுறை கொண்டுவரப்பட்டது. அடுத்து 1977ல் பிரதான பிரச்சனையாக பல்கலைக்கழக அனுமதி அமைந்தது. இவ்வாறன பிரச்சனைகளும், புறக்கணிப்புக்களும், தமிழ் மக்கள் கல்விக்கு இடையூறு விளைவிக்கும் கடும்போக்கு 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகத்திற்கு வைத்த தீயில் இருந்து வெளிப்படுத்தப்பட்டது. இதனை அரசின் காணி அபிவிருத்தி, மாகவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காமினி திசாநாயக்காவின் தலைமையிலான குண்டர்கள் செய்துமுடித்தனர்.

யாழ் மக்களின் பண்பாட்டு கருவூலமாக விளங்கிய இந்த நூலகம், சுமார் 98 ஆயிரம் புத்தகத் தொகுதிகளையும் அரிதான கையெழுத்துப் பிரதிகளையும், பண்டைய ஏட்டுச் சுவடிகளையும் கொண்டிருந்தன. இதில் முக்கியமாக கருதப்படவேண்டியவர்கள் வண. பிதா தனிநாயகம் அடிகளார், வண. பிதா. லோங் அடிகளார், வண. பிதா. தாவீது அடிகளார் (டேவிட்) முதலியோர் ஆவர். இவர்களில் தாவீது அடிகளார் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி கேட்டு மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூலகம் 1934ல் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டதாகும்.


பயங்கரவாதத் தடைச்சட்டமும் தமிழர்கள் அவலங்களும்:

1979 இல் முதல் முதலில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் பெயரால் சந்தேகத்தில் கைதாகும் ஒருவரை 18 மாதங்கள் எந்தவித விசாரணையுமின்றி தடுத்துவைக்கப்படவும், அவரைப்பார்பதற்கு அனுமதியும் மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்சட்டமானது 1982ல் நிரந்திரமாக்கப்பட்டது. இதனால் கைதானவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களே, மற்றும் தமிழ் இளைஞர்களே ஆவர். ஏராளமான தமிழ் இளைஞர்கள் எந்தவிதக் காரணமின்றியே சிறைப்படுத்தப்பட்டு சித்திரைவதைக்கு ஆளாகினார்கள்.

இவ்வாறான காலகட்ட தமிழர்களின் அவலங்களில் 1983ம் ஆண்டு முக்கியவிடம் பிடிக்கின்றது. 1983ல் பாதுகாப்பு படையின் அனுசரனையுடன் அரசு மேற்கொண்ட திட்டமிட்ட இனப்படுகொலை விடுதலை வேண்டி நின்ற மக்களுக்கு அரசு விடுத்த எச்சரிக்கையாக அமைந்தது. 1958, 1965, 1971, 1977, 1981 என கட்டவிழ்தது விடப்பட்ட இனக்கலவரங்கள் பலவும் தமிழர்கள் தமக்கெனவோர் நாடு வேண்டி போராடும் சுழ்நிலைக்கு தள்ளப்பட்டது எனலாம். 1983 இனப்படுகொலை கலவரத்தின் போது நேரிற்கண்ட சாட்சியங்களாக வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள், அவர்கள் எடுத்த புகைப்படங்கள் முதலியவன ஆவணப்படுத்தப்பட்டுள்ளது எனலாம்.

இவ்வாறான அவலங்களுக்கு மத்தியிலும் தாம் உயிர்வாழ முடியாது என அஞ்சி தமிழ் மக்கள் இடப்பெயர்வினை மேற்கொண்டனர். இவ்வாறான இடப்பெயர்வுகள் மக்களை வெளிநாடுகளுக்கு இட்டுச்சென்றது. இவ்வாறு பெரும்பாலான இலங்கை தமிழர்கள் அரசியல் புகழிடம் கோரி வெளிநாடுகளுக்குச் சென்றனர். இவ்வாறு மக்கள் இடப்பெயர்வினை மேற்கொண்டமை சிங்கள இனத்திற்கு வாய்பாக அமைந்தது எனலாம். புலம்பெயர்ந்த தமிழர்களின் பலத்தைக்குறைக்கவும், மட்டுப்படுத்தவும், சிங்கள அரசு வெளிநாடுகளில் தமது தூதரங்கள் கொண்டு, பரப்புரைகள் மூலமும் செயற்பட்டுவருகின்றது.

அவலங்கள் என்ற வகையிலே ஆவணப்படுத்தப்பட வேண்டிய முக்கிய விடயங்களாக அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள் ஆகும். அந்த வகையில் சுதந்திரப்போராளிகளை பயங்கரவாதிகள் என அடையாளம் காட்டி உலக நாடுகளின் அனுதாபத்தையும் கவனத்தையும் பெரும்பாண்மை ஆதிக்கவாசிகள் ஈர்த்து விடுகின்றனர். எவ்வகையிலும் இழப்பு என்பது சிறுபான்மை இனத்தினருக்கேயாகும்.

ஈழத்தமிழர் அவலங்கள் என்பது பொதுவாக உரிமைக்காகப் போராடிய மக்களை இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டமையே ஆகும். இனப்படுகொலை என்பது இருவகைப்படும். ஒன்று திட்டமிட்ட முறையில் படிப்படியாக ஒரு இனத்தின் அத்திவாரத்தை ஆட்டமிழக்கச் செய்து அந்த இனத்தை ஒடுக்கி அழித்தல். இது அவர்களின் மொழி, வரலாறு, பொருளாதாரம், கலாச்சாரம், அவர்கள் பாரம்பரிய நலங்களின் புவியியல் அமைப்பு முதலியவற்றைச் சிதைத்தல். அடுத்து வெளிப்படையான கொலை மூலம் அழித்தல். ஈழத்தமிழர்கள் இவ்விரண்டு வகையான அவலங்களைச் சந்திக்கின்றார்கள். இதனைவிட பொருளாதாரத்தடை போன்றவற்றையும் அரசு மேற்கொள்கின்றது.

1998 நவம்பர் 21க்கும் 27க்கும் இடையில் பாசிலோனா என்றவிடத்தில் சர்வதேச அரசியல் வல்லுனர்களின் மகாநாடு ஒன்று நடைபெறுகின்றது. இந்த மாகாநாட்டில் “சர்வதேசங்களிலும், மனித உரிமைகள் உட்பட்ட இனங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் எல்லாவித சட்டங்களும் உலகளாவியரீதியில் பாராபட்சமற்ற முறையில் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்” எனப்பேசப்பட்டது.

இன்று ஈழப்போராட்டமானது உலகெங்கும் உள்ள தமிழர்களின் போராட்டமாகப் பரிமாணித்துள்ளது. “உலகெங்கும் 71 நாடுகளில் வாழும் 70 கோடிக்கும் மேற்ப்பட்ட தமிழர்களின் கவனம் இவ்விடயத்திலேயே ஈர்க்கப்பட்டுள்ளது.” 1956இல் ஏற்படுத்தப்பட்ட தனிச்சிங்களச் சட்டமே 1972இல் ஆரம்பித்த தமிழர்களது விடுதலைப் போராட்டத்துக்கான அடித்தளத்தை இட்டது எனலாம்.

ஒப்பந்தங்கள் பலவாறு இருந்தாலும் தமிழர்களது உரிமைகளை முற்றாக நிராகரித்ததொன்றாகவே இருக்கின்றது. கடந்த 30 வருடங்களின் பின்னர் கூட இந்த நிலையில் மாற்றம் எதுவும் ஏற்பபடவில்லை. 1987 இல் இலங்கையில் அமைதியும் சமாதானத்தையும் நாட்டவென தீவிர முயற்சிகளின் பின் மேற்கொள்ளப்பட்ட இலங்கை - இந்தியா உடன்படிக்கையை தமிழரசுக்கட்சியின் பின்னாள் வடிவமான தமிழர் கூட்டணி ஏற்றுக்கொண்டு முன்னைய தமிழ் அரசியல் வாதிகள் செய்த அதேதவறைத் தொடர்ந்து.

1997இல் இலங்கை - இந்தியா ஒப்பந்தம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளின் பின்னர் கூட பொதுஐன ஐக்கிய முன்னணி முன்வைத்த தீர்வுப்பொதி சிங்கள அரசியல் வாதிகளின் சிங்களத் தேசியம் பற்றிய மனநிலையையே பிரதிபலித்தது. கடந்த நான்கு தசாப்தங்களாக தமிழர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு பார்க்கும் போது சிங்களத்தலைமை எதுவாக இருந்தாலும் தமிழர்களது சுயநிர்ணய உரிமை, அதிகாரப்பகிர்வு, அரசமொழி, குடியேற்றங்கள் என்பனவற்றில் ஓரே விதமான கொள்கையையே கடைப்பிடிப்பதன என்பது திண்மம். இலங்கையில் ஈழத்தமிழர்களின் ஆதிக்கததையும் அறிவாற்றலையும் விரும்பாத சிங்களவர்கள், அவர்களை 1970 – களில் புறக்கணிக்கத் தொடங்கினார்கள். அரசியல் அடிப்படை உரிமைகளை பறித்து நாலாந்தர குடிமக்கள் போல தமிழர்களை ஒதுக்கினார்கள். சொந்த மண்ணில் எந்த சுகத்தையும் அனுபவிக்க இயலாத நிலை உருவானதால் ஈழத் தமிழர்கள் கொதி;த்து எழுந்தனர். மகாத்மா காந்தி போல சிலர் அறவழிப் போராட்த்தை கைக்கொண்டனர். சிலர் சுபாஸ் சந்திரபோஸ் மாதிரி ஆயுதப் போராட்டத்துக்கு மாறினார்கள். தொடக்க காலத்தில் நிறைய ஆயுதக்குழுக்கள் தோன்றின. ஆனால் தெளிவான நோக்கம் இல்லாததால் அவை வந்த வேகத்தில் மறைந்தன.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக அல்லலுறும் தமிழ் இனத்தின் பிரச்சனை என்பது வெறும் பெரும்பாண்மை சிறுபாண்மைப் பிரச்சனை ஒன்றல்ல. அதற்கும் மேலாக இரு இனங்களுக்கான தேசியப்பிரச்சனை என்பதுதான் உண்மையாகும்.




உசாத்துணை - References:

Balasingam, Anton. The Politics of Duplicity, Surray, England: Fairmax Publishing Ltd.,2000

Rasaratnam, Eela varalattil oru Nokku – Thamil Eelam Naadum Arasum (Tamil), Scarborough: Raja Publications, Canada, 1995

Ehanayakivalli, Sivarasasingam. Ellam the Memories of a Nation, Canada: Students offsets services, 2000



ஏகநாயகிவல்லி சி, ஈழவரலாற்றுப்பதிவுகள், கனடா, Arrowweb publishers, 2003
பாலசுந்திரம் இ, ஈழத்து இடப்பெயர் ஆய்வு (யாழ்மாவட்டம்), கனடா, விவேகா அச்சகம், 2002


Jeyaraj D.B.S, Impact of July 1983 on Tamil armed struggle, The Sunday Leader (July 20, 2003) http://www.tamilcanadian.com

Jeyaretnam, J.S.A. Remembering Black July Of The Failed State, Tamil Canadian – July 12, 2006. )
http://www.tamilcanadian.com

ஈழம், இதழ் 12, 15. 04. 1986: பக்கங்கள் 05 – 18

Friday, December 21, 2007

மார்க்சியம் -ஓர் ஆய்வுப் பார்வை

மார்க்சியம் - ஓர் ஆய்வுப் பார்வை

அறிமுகம் :

மார்க்சியம் உலகத்தின் விளக்குவதற்கு மட்டுமின்றி அதனை மாற்றுவதற்கும் உரிய ஒரு செயற்பாட்டுத் தத்துவமாகக் கருதப்படும். மார்க்சியம் அடிப்படையில் ஓர் அரசியல் பொருளாதார சமுதாய தத்துவமேயாகும். மார்க்சிசம் என்ற இந்த ஒப்படையின் ஊடாக மார்சியம் என்ற முழு எண்ணக் கருத்தோட்டத்தையும் காட்ட முடியாது. இந்த ஒப்படையின் ஊடாக மார்சியத்தின் தாக்கம் பற்றி சிறிதளவும், மார்சியத்தின் தந்தையென அழைக்கப்பட்ட காரல் மார்க்கும் பக்கத்துணையாளருமான பிடடெரிக் ஏங்கலசும் பற்றியும், மார்சியம் தோன்றிய கால கட்டத்தின் சமுதாயப் பிரச்சனைகள் மற்றும் சமுதாய மாற்றம் பற்றியும் இவ்வொப்படையின் ஊடாக ஆராயவிருக்கின்றேன்.

மார்க்சியம் பற்றிய அறிமுகம் :

மார்க்சியம் என்பது ஒரு உயிருள்ள தத்துவம். உலகத்தில் ஐந்து கண்டங்களில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின், இதர உழைக்கும் மக்களின் உரிமை முழுக்கத்தில் கோரிக்கைச் குரலில் அது தவித்துக் கொண்டேயிருக்கும் ஒரு வகை உருமைக் குரலாகவே இருக்கும். கொத்தடிமைகளாக வெறும் கூலிக்காரக்களைப் போன்று தடத்தப்பட்ட அவலமான நிலையில் அவமதிக்கப்பட்டுக் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கத்திற்கு வர்க்க போதம் ஊட்டி அதை வலிமை பெற்ற மனிதனாக்கியது மார்க்ஸ் உருவாக்கிய தத்துவமே தவிர வேறெதுவும் அல்ல என்பதை யாரும் மறுக்கமுடியாது.

காரல் மார்க்சும் அவரது உயிர்த் தோழர் பிரெடரிக் ஏங்கெல்சும் சேர்ந்து உருவாக்கிய மார்க்சியத் தத்துவமானது உலகத் தொழிலாளி வர்க்கத்தின் தத்துவமாக மிளர்ந்து வியக்கதக்க சாதனைகளைச் புரிந்து வருகின்றது. இவற்றுக் செல்லாம் காரணமாக Russia புரட்சி தமது காலத்தில் வரலாற்று முத்திரையைப் பதித்துக் சென்றுள்ளது.

அறிவிலே தெளிவு
மனதிலே உறுதி
அகத்திலே
அன்பினோர் வெள்ளம்

என்ற மகாகவி பாரதியின் பாடலுக்கேற்ற பாட்டுடைத் தலைவனாக விளங்கத்திக்கவர் பேரறிஞர் காரல் மார்க்ஸ். இதனைப் போலவே காரல் மார்க்ஸ் பற்றி நூற்றாண்டு நினைவு மலர் ஒன்றில் கவியரசு வைரமுத்து இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

ஒன்று மட்டும் உறுதி!
மலையின் நதிகளெல்லாம்
சமுத்திரத்தை நோக்கி!
மானுட நதிகளெல்லாம்
மார்க்ஸ் நோக்கி!

வரலாற்று வளர்ச்சி விதிகளின்படி முதலாத்துவ சமுதாயம் அகற்றப்பட்டே தீரும். புதியதொரு கம்யூனிச் சமுதாயம் வந்தே தீரும் என்று மார்க்ஸ் பிரகடனம் செய்த நாள் முதலே அவருக்கெதிரான அவதூறுப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அன்று தொடங்கிய இழிவான பிரச்சாரம் இன்று வரை தொடக்கிற்றது.

“சுமார் 160 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியிறுத்தத்தோர்வில் அவர் எழுதிய விடைத்தாள்கள் இன்று கூட மீண்டும் மீண்டும் ஆராயப்படுகின்றன. மார்கஸ் கணித விடைகளைத் தானே எழுதினாரக பிற மாணவரிடம் இருந்து காப்பியடித்தாரா என்றெல்லாம் திரும்பத்திரும்ப ஆராயப்படுகின்றன. இவை மார்க்ஸ் உண்மையான மேதையல்ல என்று அவதூள்ளை மார்க்ஸ்னின் தத்துவத்தை அவமதிப்பதற்காகவே.” (காரல் மார்க்ஸ், பக்கம் 8)

இந்த வகையிலே இக்கட்டுரையின் ஊடாக மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ், அவர்கள் பற்றியும் இவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் பற்றியும் ஜேர்மனி நாடு பற்றியும் பார்ப்போம்.

ஜேர்மனி நாடு:

ஜேர்மனிய நாடு என்பது 1814 ஆம் ஆண்டு வரை ஒரு ஒன்று பட்ட நாடாகவே இருக்கவில்லை. முன்னைய தமிழகத்தில் இருந்நது போலவே முடிமன்னர்களையும், சிற்றரசர்களையும் ஆளுகைக்குள்ளேயே இருந்திருக்கின்றது. இத்தனிப் பிரதேசங்களை தமது சுயவிருப்பத்தின் பெயரிலேயே ஆட்சி செய்தனர். இவ்வகையாக ஆட்சி செய்தவர்கள் மக்களின் உருமைகள் ஏதுமற்ற மக்கட் கூட்டமாகவே வாழ வழி செய்தனர் எனலாம். இவ்வகையான மக்கட் கூட்டத்தில், விவசாயிகள், சிறுதயாரிப்பாளர்கள் ஆகியோர் மோசமான வர்த்தக நிலமையையும் சந்திக்க வேண்டியிருந்தது. இப்படியாக இருந்த நிலையில் இடையிடையே நடைபெற்ற யுத்தமானது ஓர் சிரமைப்பைப் பெற்ற பின்னர் 1815 ஆம் ஆண்டளவில் ஜேர்மன் ஒன்றியம் உருவாக்கப் பட்டது. இதன் பின்னர் முடிமன்னர் ஆட்சியின் கீழான பிரபுத்துவ அமைப்பாக ஜேர்மன் நாடு மாறியது எனலாம்.

கார்ல் மார்க்ஸ் (1818-1883) :

காரல் மார்க்ஸ் 1818 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதியன்று டிரியர் நகரில் பிறந்தார். அவருடைய தந்தையார் ஹென்ரிச் மார்க்ஸ், மேல் முறையீட்டு நிதிமன்றத்தல் வழக்கறினராகப் பணிபுரிந்தார். அத்துடன் ஸ்தல வழக்கறிஞர்களின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். அறிவியக்கத்தின் தாக்கத்திற்கு ஆளாகியிருந்த அவர் பரந்த மனப்போக்கு, முற்போக்கு சிந்தனையோட்டம், மனித நேயம், சகிப்புத்தன்மை, நேர்மை ஆகியவற்றின் இலக்கணமாகத் திகழ்ந்தாh. காரல் மார்க்சின் தாயார் பொயர் ஹென்ரியெட் பிரெஸ்பர்க் என்பாதாகும். காரல் மார்க்ஸ் 1830 ஆம் ஆண்டு டிரியர் நகரிலுள்ள உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்ப்டார். அப்பொழுது அவருக்கு வயது 12. அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கு ஜேர்மன், பிரெஞ்சு அறிவியக்கத்தின் பலமான தாக்கத்திற்கு ஆளானவர்கள் என்பதோடு மிதவாத மனப்பாங்கு கொண்டவர்களாக விளங்கினர். அவ்வகையான மன்னராட்சி முறையை அவர்களும் வெறுத்தனர். இதன் காரணமாக “பிரஷ்ய மன்னரையோ அல்லது அரசாங்கத்தையே விமர்சித்து எழுதக் கூடாது என்றும் அவை தொடர்பான கேலிச்சித்திரங்கள் வரையப்படக் கூடாதுவென்றும் அவ்வரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.” (காரல் மார்க்ஸ், பக்கம் 15) இவையனைத்தும் சேர்ந்து காரல் மார்க்ஸ் மனதில் பிரஷ்ய முடியாட்சிக் கெதிரான வெறுப்புணர்வினை ஏற்படுத்தியது எனலாம். காரல் மார்க்ஸ் படிப்பில் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார். ஜேர்மன், லத்தீன், கிரீக், பிரெஞ்ச் மொழிகளைக் கற்றார். கணிதம், வரலாறு, பௌதீகம் ஆகிய வற்றுடன் மதங்களையும் குறித்துப் படித்தார். இவர் இறுதியாண்டு படிக்கின்ற போது ‘எந்த வகைப்பட்ட வேலையைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்த இளைஞனின் பிரதிபலிப்புக்கள்’ என்ற தலைப்பில் எழதிய ஆய்வுக்கட்டுரையென்றில்

“……வேலையைத் தேர்ந்தெடுப்பது என்பதானது ஒரு மனிதனின் மகத்தான உரிமையாகும்…….இந்த முக்கியமான விடயத்தை நடக்கின்ற படி நடக்கட்டும் என்று விட்டு விடமுடியாது….” எனவும் “……ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது நமது பிரதான வழிகாட்டியாக இருக்க வேண்டியது மனிதகுலத்தின் நலனையும், நமது சொந்ந மேம்பாட்டையும் காத்துக் கொள்ளல் என்பதே. இவ்விரு நலங்களும் ஒன்றோடென்று மோதக் கூடியவை என்று நினைக்கக் கூடாது. அதற்கு மாறாக, மனிதனின் தன்மை எவ்வாறு அறிந்துள்ளது என்றால் தன்னுடைய சக பிரயைகளின் மேம்பாட்டுக்காக, நன்மைக்காகப் பாடுபடுவதன் மூலமே தன்னுடைய மேம்பாட்டை அடையக்கூடிய வகையிலே அமைந்துள்ளது.” (காரல் மார்க்ஸ், பக்கம் 16)

“…..ஒருவர் தன்னுடைய நலனுக்காக மட்டுமே பாடுவதென்றால் அவர் ஒருவேளை பெரிய அறிவாளியாக விளங்கலாம். ஓரு பெரிய ஞானியாக விளங்கலாம். ஒரு மிகச்சிறந்த கவிஞராக விளங்கலாம். ஆனால் அவர் ஒரு பொழுதும் முழுமனிதனாக ஆக முடியாது. உண்மையிலே மகத்தான மனிதனாக விளங்க முடியாது.” (காரல் மார்க்ஸ், பக்கம் 17)

இவற்றையெல்லாம் வைத்துப் பார்கின்றபோது இளம் வயது முதலே மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்பது அவருடைய உள்ளத்தில் ஆழப்பதிந்திருந்தது என்பது அவரின் ஆய்வுரைக்காக எழுதிய கட்டுரையில் சில பகுதிகளிருந்து தெரியவருகின்றது. இவ்வகையான இக்கட்டுரைகள் இதனை நன்கு விளக்கும்.

ஆரம்பத்தில் பான் பல்கலைக்கழத்திலும் பிறகு பொர்லின் பல்கலைக் கழகத்திலும் சட்டம் பயின்றார். அங்கு தத்துவத்தில் ஆர்வம் செலுத்தனார். இவரது பல்கலைக்கழக வாழ்க்கையின் போது ஜேர்மன் தத்துவவியல் என்பது ஜரோப்பாக்கண்டத்தில் வளர்ச்சியடைந்து வந்த இயலாகவிருந்தது. இவரது பல்கலைக்கழக வாழ்க்கையில் இருக்கின்றபோது கோபமிகு இளைஞர்கள் என அழைக்கப்படும் இளம் ஹெகலியர்களிடம் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தார்.

“ ஹெகலின் நூற்களைப் படித்த மார்க்ஸ் ஆரம்பத்தில் ஹெகலின் கருத்துக்கள் மார்க்சை பெரிதும் கவரவில்லை. ஹெகலின் கருத்துக்கள் பெரிதும் கோமாளித்தனமானலை என்றே அவர் கருதினார். ஆனால் ஹெகலின் நூற்களைப் படித்த மார்கஸ் ஹெகல் உருவாக்கிய இயக்க - இயல்முறை என்பதாகும். உலகில் நிரந்தரமானதும் இறுதியானதும் புனிதமானதும் என்று எதுவுமே கிடையாது என ஹெகல் தெளிவாகக் கூறினார். இயற்கை, சமுகம், மனித சிந்தனை உள்ளிட்ட அனைத்தும் வளர்ச்சியடைகின்றன, மாறுதல் அடைகின்றன, இது இடையிடையே விடாமல் நடந்துவரும் இயக்கக் கோட்பாடாகும் என்று ஹெகல் திட்டவட்மாக் கூறியிருக்கின்றார்.” (காரல் மார்க்ஸ், பக்கம் 21)

ஏற்கனவே கடவுள் மறுப்பு நாத்திகவாதத்தில் உறுதியாகவிருந்த மார்க்ஸ்க்கு ஹெகலியரின் மதத்தையும், கடவுளையும், வறட்டுத்தத்துவத்தையும் கோட்பாடுகளையும் துணிச்சலான விமர்சனம் செய்தமை பிடித்திருக்கின்றது எனலாம். தத்துவவியலில் அடிப்படைகளையும் அதற்கும் சமுதாயத்திற்குமுள்ள உறவு குறித்தும் ஆராய்ந்து வந்த மார்க்சின் சிந்தனைப் போக்கு ஹெகலியரின் பக்கம் ஈர்த்து எனலாம். இவற்றைப் போன்றவற்றையே மார்க்சும் விரும்பினார். அதேபோல் கருத்துச் சுகந்திரம், பத்திரிகைச் சுகந்திரம் போன்ற வற்றையும் விரும்பியவர் ஆவார்.

பத்திரிகையாளர் மார்க்ஸ் :

மார்க்ஸ் 1842 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை தனது மனைவி ஜென்னியின் குடும்பத்தினரோடு தங்கியிருந்த வேளை ரைன் மாநிலத்திலிருந்து முதலானித்துவ வர்க்கத்தினர் பிரஷ்ய முடியாட்சி அரசாங்கத்திற்கு எதிரான ஒரு பத்திரிகையை தொடங்கவிரும்பி “ரைனிஷ் ஜைடுங்” என்ற பெயர் கொண்ட பத்திரிகை, கொலோன் நகரத்திலிருந்து வெளிவர ஆரம்பித்தது. மார்க்ஸ் ரைன் மாநில சட்டமன்றத்தைக் குறித்து தொடர்கட்டுரையென்றை எழுதினார். இது பற்றியெழுதி வெளியானவுடனேயே பிரஷ்ய அரசாங்கம் அதிர்ச்சியடைந்து தணிக்கையை அமுலுக்குக் கொண்டுவந்தது. முதலிலே இந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராகவிருந்த இவர், பிறகு இந்த பத்திரிகைக்கு பிரதம ஆசிரியராகப் பணியாற்றினார். புரட்சிகரமான ஜனநாயகக் கருத்துக்களை பிரச்சாரம் செய்வதை விட்டு விட்டு பிரஷ்ய அரசாங்கத்தின் பக்கமாகவிருக்க விரும்பவில்லை. இதனால் பிரதம ஆசிரியர் பதவியிலிருந்து விலத்தினார். இவர் பத்திரிகைத் துறையிலே பணியாற்றியது, மார்க்சின் உலகக் கண்ணோட்டத்தை விருவுபடுத்த உதவியதும் சமுதாய வாழ்வியலில் பொருளாதார நலங்கள் ஆற்றும் பங்கையும் அவரால் உணர முடிந்தது எனலாம்.
மார்க்ஸ் நிலப்பிரபுத்துவ அமைப்பைப் புரிந்து கொண்டவர். மக்களின் போராடும் உணர்வைக் கண்டு வளர்ந்து வரும் முதலாளித்துவ வர்க்கம் பயன்படுவதை கண்டறிந்தார். இவ் நிலப்பிரதித்துவ அமைப்க்கு எதிரான சமரசமற்ற பேராட்டம் நடத்தத் தயங்குவதையும் மார்க்ஸ் கண்டார். இவ்வகையாக மார்க்ஸ் பத்திரிகைத் துறையிலே பணிபுரிந்தமை இவரை பல வழிகளில் இட்டுச் சென்றது எனலாம். இப் பத்திரிகைத் துறையின் ஊடாக பொருளாதார, குமூகப் பிரச்சனைகளை ஆராய்வதிலும், உழைக்கும் மக்களினதும், ஏழை எழிய மக்களின் ஆதரவற்ற நிலமையையும், அதற்கான காரணிகளையும், மார்க்சின் கருத்துக்களை உருவாக்குவதிலும் இவரது பத்திரிகைத் துறை அமைந்திருந்தது. இவர் “ரைனிஷ் ஜைடுங்” பத்திரிகை நடத்தியதில் தனக்குக் கிடைத்தத அனுபவம் குறித்து பின்னாட்களில் பின் வருமாறு எழுதினார்.


“நான் நீதி இயலைப் படித்த போதிலும், தத்துவ ஞானத்திற்கும், வரலாற்றிக்கும் உட்பட்ட பாடமாகவே அதைப் படித்தேன். 1842 - 43 ஆம் வருடங்களில் ரைய்னீஷ் ஜைடுங் என்ற பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில் பொருளாயத நலன்கள் என்று வர்நிக்கப்படுகின்ற வற்றை விவாதிக்க வேண்டிய இக்கட்டான நிலை முதல் தடவையாக எனக்கு ஏற்ப்பட்டது. காட்டு விறகுகள் திருட்டுத் தனமாக எடுத்துச் செல்லப்படுவதையும், நிலச் சொத்துடமை துண்டு துண்டாகப் பிரிக்கப்படுவதையும் பற்றி ரைன்லாந்து சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள்;; மோசெல் பள்ளத்தாக்கிலுள்ள விவசாயிகளின் நிலையைப் பற்றி ரைய்னீஷ் ஜைடுங் எழுதியவற்றிக்கு எதிராக ரைன் மாநிலத்தின் ஓபர்-பிரசிடெண்ட் ஹெர்வொன் ஷரப்பர் எழுதிய அதிகாரப்பூர்வமான வாதங்கள் கடைசியாக வர்த்தகச் சுதந்திரம், வர்த்தக் காப்புவரி பற்றிய நடைபெற்ற சொற்போர்கள் என்னை முதலில் பொருளாதாரப் பிரச்சனையில் கவனத்தைச் செலுத்துமாறு செய்தன” (காரல் மார்க்ஸ், பக்கம் 44)

(அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு கருத்துரை என்ற நூலில் முகவுரையிலிருந்து) இதனை என்.ராமகிருஷணன் தந்திருக்கின்றார்.

இவர் பத்திரிகைத் தொழில் நடத்தியபோது ஒரு புறம் அரசாங்கத்தின் தொல்லைகளைச் சந்தித்தார். இதனைவிட சுகந்திரமானவர்கள் என அழைத்த இளம் ஹெகலியர்கள் முன்வைத்த தீவிர கொள்கையை சந்திக்க வேண்டியிருந்தது. இதனால் மார்க்சை அவர்கள் “பழமைவாதி” எனவும் “துரோகி” என்றும் வசை பாடினார்கள். இதன் பின்னர் மார்க்ஸ் அவர்கள் “சட்டம் பற்றிய ஹெகலின் தத்துவ இயல் குறித்து விமர்சனத்திற்கு ஒரு பங்குப்பணி” என்ற நூலை எழுதினார்.

இந்நூலின் ஊடாக மார்க்சின் கருத்தைப் பார்க்கின்றபோது, பொருளாதாரம் மற்றும் பொருளாயத உறவுகள் என்பவைதான் சமூக வளர்ச்சியின் அடித்தனமாக அமைந்தன என்பது மார்க்சின் கருத்தாக இருந்தது. இதனால்தான் வர்க்கப் போராட்டமும் புரட்சிகளும் உருவாகின எனக்கருதினார்.

இதனைவிட தத்துவ இயலைக்கற்றிந்தவர், முதலாலித்துவ அமைப்பை அகற்றுவதன் மூலமே சுரண்டலை ஒழிக்க முடியுமெனவும், உழைப்பாளி மக்கள் மகிழ்சியாக வாழ முடியும் எனவும் கருதினார்.

இதனைவிட சமூக அரசில் ஒழுங்கு முறையில் இருந்து மனிதகுலம் விடுதலை பெறவேண்டுமாயின் சோசலிசப் புரட்சி மூலமே சாத்தியப்படும் என்று முடிவுக்கு வந்தார் எனலாம். இதற்கு பாட்டாளி வர்க்கம்தான் சோசலிசப் புரட்சியை நடாத்தக் கூடிய திறமை பெற்ற சமூக சத்தி என நம்பினார். இதனைப் போலவே ஏங்கலிசும் அதே முடிவிற்கு வந்திருந்தார். இவர் முதலானித்துவ அரசியல் பொருளாதாரத்தையும், தத்துவ இயலையும் அலசி ஆராய்ந்து அதன் பின்னர்தான் இந்த முடிவிற்கு வந்தார். இதனால் சோசலிசம் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

சோசலிசம் :

சோசலிசம் பொருத்தமான ஒன்றா இல்லையா என தெரிந்து கொள்வதற்குரிய மற்றொரு வழி என்னவென்றால், அது பிரச்சாரம் செய்த அதனுடைய சொந்த கொள்கையையே அதனால் செயல்படுத்த முடிந்ததா என்பதை தெரிந்து அது செயல்படுத்த தகுந்த கொள்கையா இல்லையா என்பதை கண்டு கொள்வதாகும். ரசியா சோசலிசத்தை ஒரு பக்கம் பின்பற்றியும் மறு பக்கம் அதை மீறியும் வந்துள்ளது என ரசியாவின் நவீன காலச் சரித்திரம் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. சரியான மார்க்சிசக் கொள்கைப்படி ரசியக் கம்யூனிசத்தை நோக்கினால், அதனுடைய பல செயல்பாடுகள் அதை ஒட்டியது எனக் கூற இயலாது. மாறாக, ரசியாவின் சாதனைகள் என்பது, சோவியத் அமைப்பில் மார்க்சிசத்தை இழைய விட்டதால் உண்டானது என்பதை விட அதை நிராகரித்ததால் உண்டானது. சோசலிசக் கொள்கைப் பிரகாரம் பாட்டாளி வர்க்கமே புரட்சியைக் கொண்டு வரும் ஒரு இயக்கம் என்பதாகும். இதனால்தான் சோசலிசப் புரட்சி முதலில் இங்கிலாந்தில் கொண்டு வரப்படும் என்று மார்க்சு முன்னறிவிப்புச் செய்தார். ஏனெனில் இங்கிலாந்தில்தான் முதன் முதலில் மற்ற முதலாளித்துவ நாடுகளுக்கு மிகவும் முன்பாகவே தொழிற்புரட்சி தோன்றி அதனுடைய முதிர்ச்சியையும் முழுமையையும் அடைந்திருந்தது: பாட்டாளிவர்க்கத்தினரின் எண்ணிக்கையும் சக்தியும் மிகவும் உணர்வுடன் இருந்தது.

இந்தவிடத்திலே மார்க்ஸ் அவர்கள் “சட்டம் குறித்து ஹெகலின் தத்துவ விமர்சனததிற்கு ஒரு பங்குப்பணி” என்ற தலைப்பிலே எழுதிய கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் அவர்இ நடப்பிலுள்ள சமுதாய அமைப்பை எதிர்த்து பேர்ப்பிரகடனம் செய்ததுடன், பாட்டாளி வர்க்கம் என்பதுதான் சோசலிசப் புரட்சியை நடத்தக்கூடிய திறன் பெற்ற சமுதாய சத்தி என்ற முடிவுக்கு வந்திருந்தார் என்பதைக் கவனிக்க கூடியதாகவுள்ளது.

சோசலிசத்தின் மிகவும் முக்கியமான கொள்கை கூட்டுடமையாகும். சோசலிசக் கருத்தியலின்படி, தனியுடமை என்பது குறுகிய காலத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படக் கூடியது. அதனால்தான் கூட்டுடமை என்பது சோசலிச நடைமுறைகளின் ஆரம்பமாகவும் இறுதியானதாகவும் கருதப்படுகின்றது. பொதுவாகப் பார்த்தால் சோசலிசம் உழைக்காமல் வந்த வருமானத்திற்கு மரண எதிரியாகும், அதை எல்லா வகையான சுரண்டலிற்கும் மூலகாரணமாகவும் கருதியது எனலாம்.

லெனின் மிகவும் சந்தேகமற்ற வார்த்தைகளில் மறைமுக வரிகள் பற்றிக் கூறுகையில்: மறைமுக வரிகள் உண்மையில் ஏழைகளின் சுமத்தப்படும் ஒன்றேயாகும். (Collectd Works. vol. II, 3rd edition, p. 225) எனக் கூறியிருக்கின்றார். இந்த வகையிலே சோசலிசம் மற்ற தொழிலாளிகளின் உழைப்பிலிருந்து பயன் பெறுவதை தடை செய்வதும் சோசலிச அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். இனி மார்க்சியத்தின் செயற்பாடுகளைப் பார்போம்.
மார்க்சியத்தின் ஊடாக உலகத் தொழிலாளர்களை ஒன்று சேர்த்து அவர்கள் அனைவரையும் ஒன்றினைக்க முயற்சி செய்யப்பட்டது எனலாம்.

“உலகம் முழுவதையும் மாற்றியமைக்கும் வரலாற்றும் சிறப்புமிக்க பணியை துவக்கிவைத்த மேதை மார்க்ஸ் உலகத்தின் குடிமகன், உலகம் முழவதிலும் உரியவர். எந்த தனியொரு நாட்டிற்கும் மட்டும் சொந்தமானவரல்ல ஆவார்.” (காரல் மார்க்ஸ், பக்கம் 71)
மார்க்ஸ் தன் வாழ்நாள் முழுவதிலும் சர்வதேசவாதியாகவே இருந்தருக்கின்றார். இனம், மொழி, தேசம், போன்ற வரம்புகளைக் கடந்த மனிதராக, உலக மனிதராக நின்றார் எனலாம்.
மார்க்சும், ஏங்கெல்சும் எழுதிய “ஜெர்மன் தத்துவம்” என்ற நூல் இயற்கை, மனிதன், சமூக உறவுகள் போன்றவற்றின் வளர்ச்சி அமைப்பு, மற்றும் வளர்ச்சி குறித்து பொது விதியை முன் வைத்தனர். இதுதான் இயக்கவியல் பொருள்முதல் வாதம் என அழைக்கப்படுகின்றது. இவை முற்றிலும் புதிய தன்மையைக் கொண்ட தத்துவத்தைக் கொண்டவை.

“ஆணும், பெண்ணும், அரசியல், விஞ்ஞானம், கலை, ஓவியம், மதம், போன்றவற்றை குறித்தும் ஆராயும் முன்னர்; அவர்களுக்கு உண்ண உணவும், குடிக்க நீரும், உடுத்த ஆடையும், வசிக்க வீடும் வேண்டியுள்ளன. அதாவது பொருட்கள் உற்பத்தி என்பதும், உயிர் வாழ்வதற்கு தேவையான பொருட்கள் உற்பத்தி என்பதும் அதன் மூலம் மக்களின் பொருளாதார வளர்ச்சிக் கட்டம் என்பதும்தான் சமூக அடித்தனமாக உள்ளன என்று மார்க்சும், ஏங்கல்சும் இந்நூலில் கூறினர்” (காரல் மார்க்ஸ், பக்கம் 73)

“ உணர்வு என்பது வாழ்க்கையைத் தீhம்மானிக்க வில்லை. ஆனால் வாழ்க்கை என்பதுதான் உணர்வினைத் திர்மானிக்கின்றது என்றும் மார்க்ஸ்சும், ஏங்கெல்சும் பிரகடணம் செய்தனர்.” (காரல் மார்க்ஸ், பக்கம் 74)

இப்படியாக பிரகடணத்தைச் செய்த மார்க்சும், ஏங்கெல்சும் தொழிலாளி வர்க்கத்திற் கென்று ஒரு புரட்சிகரமான தத்துவக் கோட்பாட்டை உருவாக்கி அதன் மூலமாக உலக நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே பரப்புவதற்கு பாடுபட்டனர்.

இந்த வகையிலே ‘மதிப்பு’ (Value) என்பது சரக்கில் பொதிந்துள்ள மனித உழைப்புத்தான் என்று அவர் கூறினார். இது பற்றி என். ராமகிருஷணன் தனது “கார்ல் மார்க்ஸ்” என்ற நூலிலே ‘தத்துவத்தின் வறுமை’ என்ற தலைப்பில் கூறியதாவது.

“முதலாளித்துவ அமைப்பில் பணம் என்பது, முரண்பாடுகளை உருவாக்கவில்லை. முதலாளித்துவ அமைப்பு என்பதே அடிப்படையில் முரண்பாடாக உள்ளது. மதிப்பு மற்றும் பணம் என்பவை இருக்க வேண்டிய தேவையை அது தேவையாக்கி உள்ளது. மார்க்ஸ் பின்வருமாறு சுருக்கமாகக் கூறினார்: “ பணம் என்பது ஒரு பொருள் அல்ல, அது ஒரு சமூக உறவு.” முதலாளித்துவத்தின் சிக்கலான உள் முரண்பாடுகளைப் பணத்தை அகற்றுவதன் மூலமாக ஒழித்துவிட முடியாது. ஏனென்றால், இந்த முரண்பாடுகள் உற்பத்தி வடிவில் இருந்து தேன்றியுள்ளன என்பதுடன், முதலாளித்துவ தனிச் சொத்துரிமையின் விளைபொருளாகுமென்றும் மார்க்ஸ் சுட்டிக்காட்டினார்.” (காரல் மார்க்ஸ், பக்கம் 81)

என என். ராமகிருஷணன் தனது “கார்ல் மார்க்ஸ்” என்ற நூலிலே ‘தத்துவத்தின் வறுமை’ என்ற பகுதியில் எடுத்துக்காட்டியுள்ளார்.

இதனைவிட தொழிலாளிகளின் பொருளாதாரப் போராட்டங்கள், அரசியல் புரட்சிகர நடவடிக்கையாக வளர்ந்தே தீருமென்று மார்க்ஸ் அவர்கள் கூறியிருக்கின்றார் எனப் பார்க்க முடிகின்றது. இதன் காரணத்தால் ஒரு வர்க்கத்திற்கு எதிரான இன்னுமொரு வர்க்கம் தொடரும் போராட்டங்களை ஒரு வகையிலே அரசியல் போராட்ங்களேயாகும் என தெளிவு படுத்தியுள்ளார்.

மார்க்சியம் என்பது ஒரு உயிருள்ள தத்துவமாக விளங்கும் போதிலும், அது உலகத்தில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் உழைக்கும் மக்களின் உரிமை முழுக்கத்தில் கோரிக்கைச் குரலில் அது தவித்துக் கொண்டேயிருக்கின்றது எனலாம். மார்கசியத்தை மார்க்சிய வாதிகளின் வழியாகப் புரிந்து கொள்வதுதான் முதன்மையானதாகும். காரணம், மார்க்சிய வாதிகளின் கருத்துக்கள் வரலாற்றுரீதியில் புரிந்து கொள்ளத்தகுந்தவை. சுருங்கக்கூறின், மார்க்சியத்தின் அழகியலைப் பின்னால் வந்தவர்கள் எப்படி புரிந்து கொண்டு எப்படி விளங்கினார்கள், எப்படி வளர்த்தார்கள், எப்படியெல்லாம் இணைந்து வாழ்ந்தனர், எதையெல்லாம் மறுத்தனர், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நாடுகளில் எவ்வாறு தன்மை முதன்மை கொடுத்து மார்க்சியத்தை அங்கிகரித்து வாழ்ந்தனர் என்பதையெல்லாம் பார்க்கக் கூடியாதாகவிருக்கும் எனலாம். இந்த வகையிலே ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமாயின் இன்னும் மார்க்சியம் வாழ்ந்து கொண்டே இருக்கும்.



துணை நூற்கள்:

ராமகிருஷணன். என் (1993) கார்ல் மார்க்ஸ்: பாட்டாளி வர்க்கத்தின் தத்துவ மேதை, சென்னை, சவுத் ஏசியன் புக்ஸ்.

நடராசன். தி.சு (1990) திறனாய்வுக் கொள்கைகள், மதுரை, அன்னம் புத்தகமையம்.


Thursday, December 20, 2007

மொழியியல் - ஆய்வுக்கட்டுரை.

மொழியியல் - ஆய்வுக்கட்டுரை.

மொழியியல் ஓர் அறிவியல். ஆராய்க?

மொழி ஒரு கருவி. ஒரு தகவல் பரிமாற்ற சாதனம் என்று பலராலும் சொல்லப்பட்டு வருகின்றதைப் பார்கின்றோம். மொழியானதது சிந்தனைக்கும் செயலுக்கும் கருவியாக இருக்கின்றது. மொழி என்பது பண்பாட்டு நிறுவனமாக இருக்கின்றது. நீண்ட வரலாற்றின் வெளிப்பாடு, தேசிய இனத்தின் இலச்சனை, உணர்ச்சி பூர்வமான ஒர் இலக்கு. மனிதனின் அனுபவங்களும் உணர்புகளும், கற்பனைகளும், சிந்தனைகளும் தடம் பதித்துச் செதுக்கிய மொழி மனிதப் பண்பாடு அறிவியல் துறைகள் எல்லாவற்றிக்கும் விளங்குகின்றது.

மானிடவயலாளர் மாவினோவஸ்கியின் கூற்றின்படி மொழியை அறிவது என்பது பண்பாட்டினை அறிவதாகும். ஏனெனில், பண்பாட்டுச் சூழ்நிலையின் சூழமைவினை (Context of Situation) அது எப்போதும் பண்பாடு சார்ந்தே அமைகின்றது. பண்பாடும் மொழியும், பண்பாடு -> மொழி -> பண்பாடு என்ற உறவினை அல்லது பண்பாடு -> மொழி என்ற உறவினைக் கொண்டது. எனவே மொழி பற்றிய கோட்பாடு ( மொழியியல்) பண்பாடு பற்றிய கோட்பாட்டின் ஓர் அங்கமாக விளங்குகின்றது என மாவினோவஸ்கி கூறுகின்றார்.

இலக்கியத் திறனாய்வின் சிறப்பான அம்சங்களில் ஒன்று மொழியியல் வழியிலான அணுகுமுறையாகும். மொழியியலைப் பொறுத்த மட்டிலே அது இயல்பாகவே இலக்கியத்தை தனக்குரிய ஒரு விரிபுத்தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. அதன் மூதாதையாக அல்லது அதன் முன் வடிவமாக உள்ள இலக்கணமும் அதன் தொடக்கத்தில் இருந்து இலக்கியத்தோடு இணைந்திருந்ததனால் மொழியியல் இலக்கியத்தோடு நெருக்கம் கொண்டிருப்பது உண்மையாகின்றது.

மொழியியல் அறிவியல் எனப்பார்க்கும் போது அதன் பல வழிகளிலும் பார்க்கத் தோன்றுகின்றது. அவற்றை பல கூறுகளாக விளக்கலாம். அதன் வாயிலாக மொழியியலை ஆறு வகைப் பிரிவுகளா வகைப்படுத்திப் பார்ப்போம்.

1. மொழி என்பது ஓர் ஒழுங்கமைவு.

2. அதற்கு நெருக்கமான உளவு கொண்ட பல உள் ஒழுங்குகள் உண்டு.

3. மரபுகளின் தொடர்ச்சியாகவும் காலம்இ இடம், தேவை கருதிய வளர்ச்சியாகவும்

4. சமுதாயத்தின் பண்பாட்டின் ஓர் உற்பத்திப் பொருளாகவும் சாதனமாகவும் உள்ள மொழி அச்சமுதாயத்தின் புலப்பாடகவும் பொருட்டாகவும், இலச்சனையாகவும் குறியீடாகவும் செயற்பாடு கொண்டது.

5. பல படிநிலைகளைக் கொண்ட அம்மொழி பல பரிமாணங்களையும் எல்லைகளையும் ஊடகங்களாகக் கொண்டது.

6. அது அறிவியல் பூர்வமாக புறவயநிலையில் - ஆனால் அதன் அகவயச் சார்பு சிதைவுறாமல் புலப்படும் படியாக ஆராயப்படக்கூடியது.

மொழியியலில் இந்த நம்பிக்கையும் ஆர்வமும் வலுவும் அறிவியல் ஆராய்ச்சியை மொழியிலயல்ரீதியாக அணுகுவதற்கு நல்ல தளம் அமைத்துவிடுகின்றது. மொழியிலில் மொழியமைப்புக் கூறுகளாகிய ஒலியியலும் சொல்லியலும் மிகுந்த முக்கியிடம் பெறுகின்றன எனலாம்.
மொழியியல் வழித்திறனாய்வு உருவாகி வளர்வதற்கு ஆதாரமாக அமைந்த ஒன்றோரொன்று தொடர்புடைய அறிவோட்டங்கள் அறிவியல் ஆராட்சிகள் போன்றன பெரும் வீச்சும் Russian Formalism செல்வாக்கும் கொண்ட இதன் Prague Structuralism நடைமுறைகள் போன்றவை மொழியியல் திறனாய்விற்கு மறுமலர்ச்சியும் உந்துதலையும் தருவதாகவும் அமைந்து எனலாம்.
இந்த வகையிலே தமிழ் மொழியில் தொல்காப்பியர் இத்தகையவொரு பண்பிணை அறிந்துள்ளார். அவர் எழுத்துக்கள் பற்றியும், செய்யுள் வழக்குப் பற்றியும் மேலும் மொழியின் கூறுகள் பற்றியும் அறிவியல் சார்ந்து ஆராய்ந்துள்ளார். இவரைத் தொடர்ந்து வழி நூலசிரியர்களும் மொழியியல் பற்றி அவர்களது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் எனலாம். இவ்வகையான தொல்காப்பியரின் அணுகு முறைகள் கருத்தோட்டங்களோடு பொருத்திவைத்துப் பார்ப்பதற்கு நிறையவிடங்கள் உண்டு.
மொழியியல் கூறுகளை அளவு நிலையில் பருத்தும் கணக்கிட்டும் கூறுகின்ற புள்ளியியல் முறையிலான முயற்சி சில மொழியியலாளர்களாலும், மொழியியல் அறிந்த புள்ளியியலாளர்களும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. மொழியியல் ஒரு புறவய ஆராய்வு என்ற கருத்து மேலீட்டினால் மொழியியலாளர்கள் சிலர் பகுப்புக்கள் தருவதிலும் அவற்றை விபரிப்பதிலுமே அதிக கவனம் செலுத்துவதுண்டு. இன்றும் பல அறிவியல் நடையியலளர்கள் உருவவியலின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு, இலக்கியமொழி வழக்கினை மொழியின் ஏனைய வழக்கு நிலையிலிருந்து தனிமைப்படுத்தி அதனை சிறப்பிப்பதாக நினைக்கின்றனர் எனலாம்.
மொழியியல் திறனாய்வு அதன் ஆரம்பகால மரபுவழி உருவவியல் பார்வையிலிருந்தும் அதற்குட்பட்ட ‘நவீன திறனாய்வு’ என்னும் போக்கிலிருந்தும் விடுபட முயன்று வருகின்றது. இந்த வகையிலே தத்துவ ஆராய்ச்சியும் மொழிக்கு இலக்கணம் கானும் முயற்சியும் வளர்ந்த பின்னரே மொழியைப் பற்றிய உண்மையான ஆராய்ச்சி தொடங்கியது எனக்கூறலாம். இவ்வகையில் முன்னினையில் நின்றவர்கள், இந்தியர்களும், கிரேக்கர்களும் ஆவார்கள்.


தொல்காப்பியமும் பாணினீயமும் இவ்வாறு தோன்றிய மொழியியல் அறிவியல் ஆராய்ச்சி நூற்களில் மிகப்பழமையானவை. மொழியியலின் தந்தையெனக்கருதப்படும் இலெனாட் பளும்ஃமில்டு (Leonard Bloomfield) பாணினியில் இலக்கணத்தைக் கற்றதனாலேயே தமக்கு இத்தகைய எண்ணங்கள் தோன்றின என்கின்றார். இந்த வகையிலே கிரேக்கர்களை ஆராய்ந்தவர்களில் முதன்மையானவர் பிளேட்டோ. இவர் பொருளுக்கும் அதன் பெயருக்கும் தொடர்பு இருப்பதாக தனது அறிவியல் ஆராய்ச்சியில் கருதினார். கிரேக்கர்கள் ஊக முறையில் ஆராய்ந்தனர். இதனை ஆங்கிலத்தில் (Speculative) எனப்படும் முறையேயாகும். இந்த வகையிலே பிளேட்டோவின் மாணவர் அரிட்டாட்டில் தம் ஆசிரியர் போக்கினின்றும் மாறுபட்டவர். அவர் மொழிமரபானது (Convention) உடன்பாட்டாலும் (Agreement) உண்டாகியது என நம்பினார். குறைந்தது இரண்டுபேர் இந்தப் பொருளுக்கு இதுதான் ஒலிக்குறியென உடன்பட்டிருக்க வேண்டுமெனவும் அதுவே அப்பொருளுக்குப் பெயராயிற்று என நம்பினார்.

ஓரு மொழியை ஆய்வுசெய்வதற்கு அம்மொழியை மொழிபெயர்ப்புச் செய்வது, பிற மொழிச் சொற்களின் தொகுப்பு போன்றன முக்கியமானவை. மொழியிலலைப் பொறுத்த வகையிலே பதினாறாம் நூற்றாண்டை இக்கால மொழியியலின் தொடக்ககாலம் என்று கூறலாம். இதற்குக் காரணம் பிறமொழியறிவும் அச்சு இயந்திரம் வந்த பின்னே மொழிபற்றிய ஆய்வின் செயற்பாடாகும். இவர்களின் வழக்கில் இருவரும் மொழிகளை ஆராய்ந்து இலக்கணம் காண வேண்டும் என்ற கருத்தினை கொண்டிருந்தனர் எனலாம்.
அறிவியல் வழியில் மொழியியலை வழிகாட்டியவர்களில் அடுத்தர் ஹர்டர். 1772 இல் இவர் மொழிகளின் தேற்றத்தைப் பற்றிய கட்டுரையில் மொழி கடவுளால் கொடுக்கப்பட்டது என்ற கருத்தைக் கண்டித்தார். மனிதன் மொழியைக் கண்டுபிடித்தான் என்ற கருத்தையும் மறுத்தார். பிறக்கும் குழந்தைக்குப் பிறக்க வேண்டும் என்ற தூண்டுதல் அமைந்திருப்பது போல மனிதனிடமும் அமைந்த தூண்டுதல் ஒன்றே மொழியின் தோற்றத்திற்குக் காரணம் என்றார். இதனைப் போலவே சர் வில்லியம் ஐன்ஸ் என்ற ஆங்கிலேயர் வடமொழியை நன்கு கற்றவர். வடமொழிக்கும் ஜரோப்பிய மொழிக்குமான தொடர்பினை கண்டு இம்மொழிகள் ஒரே மூலத்தில் இருந்துதான் தோன்றியிருக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலாகக் கூறியவர் இவர்தான். இதனைப் போன்றே பலர் இவ்வகையான மொழியியல் சார்ந்து அறிவியல் ஆராய்ச்சியில் மேற்க்கொண்டுள்ளனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டினை வரலாற்று மொழியியலின் பொற்காலம் என்றால், இருபதாம் நூற்றாண்டினை வரலாற்று விளக்க மொழியியலின் பொற்காலம் என்று கொள்ளலாம். இந்நூற்றாண்டிலே விளக்க மொழியியலுக்குரிய கோட்பாடுகளை விளக்கியவர்களில் முதல்வராக பெர்டினாணட் சசூர். (Ferdinand de saussure 1857 – 1913). ஜரோப்பாவில் சசூருக்குப் பின் தோன்றியவர்கள் இவருடைய கருத்துக்களால் வளர்ந்து வெவ்வேறு வகையான அறிவியல் கோட்பாடுகளை தெரிவித்தனர். சுசூர் கூறிய மதிப்புக்கள் பின்னர் பலவாறு பயன்பட்டன. இவர் தனது ஆய்வின் படி இரண்டு விதமான மதிப்புக்களைக் கூறினார். ஓன்று போச்சில் அடுத்தடுத்து தோன்றுவது. மற்றென்று சொற்களில் பொருள் கோளில் அமைவது என்றார். இவரும் இவரைப் பின்பற்றிய ஆய்வாளரும் மொழியின் ஒலியமைப்பை ஆராய்வதற்கு வேற்றுநிலைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டனர். இதன் அடிப்படையிலேயே மொழியியலில் காணப்படுகின்ற ஒலிகளின் அமைப்புத்தொடை காண முடியும் என்கின்றார். இவ்வாறு தோன்றிய கருத்துக்களுக்கு எதிர்க்கருத்துக்களும் தோன்றின எனலாம். இவ்வகையிலே எழுந்த எதிர்ப்பின் முடிவாக சசூர் வரலாற்று மொழியியலையும், விளக்க மொழியியலையும் ஒரே விதமான கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய முடியாது எனத் தெரிவித்தார். இது இவ்வாறு இருக்க வரலாற்று மொழியியலின் மொழியின் இலக்கண அமைதிகளில் காணப்படும் வேறுபாடுகளுக்குக் காரணமான ஒலி மாற்றங்களே முக்கியமானவை. அம் மாற்றங்களே செயற்பாட்டு மாற்றங்கள் எனப்படும். இதனால் இம்மாற்றங்களில் இழையும் (Harmony) சிக்கனமும் (Economy) இருக்கின்றன. எனவேதான் தனித்து நிற்கும் மாற்றங்களும் அமைப்பு முறைக்கு அகப்படா மாற்றங்களும் மறைந்து விடுகின்றன.

மேலும் இந்நூற்றாண்டில் தோன்றிய மற்றொரு புரட்சிகரமான கோட்பாடு மாற்றிலக்கணம் (Transformational Grammar). இக்கோட்பாட்டை 1957 இல் நோ அம் சோம்ஸ்கி (Noam Chomsky) வெளியிட்டார். இவ்வகையாக மொழியில் சம்பந்தமான மொழியியல் அறிவியல் ஆராட்கசிகள் பல்வேறு மொழியியல் கூறுகளை நோக்கி விரிவடைகின்றன. சில எடுத்துக்காட்டுகளாக ஒலியியல், ஒலியுறுப்புக்களும் அவற்றின் தொழிலும், ஒலியனியல், ஒலியன்களை வகை செய்யும் முறை மற்றும் உருபன் போன்ற மொழிசார் பகுதிகளையும் நோக்கிக் செல்கின்றன எனலாம்.

பொதுவாகப் பார்த்தால், மொழியென்பது சிந்தனைக்கும் செயலுக்கும் கருவியாக இருக்கின்றது. மொழியியல் வழி அறிவியல் ஆய்வுககள் உருவாகி வளர்வதற்கு ஆதாரமாக அமைந்த ஒன்றேடொன்று தொடர்புடைய அறிவோட்டங்கள் இன்றும் மொழி தொடர்பானதும் மொழியியல் சார்ந்தும் அறிவியல் நோக்கிலான தேடலையும் ஆய்வையும் இட்டுச் செல்கின்றது.

Aug 24, 2006

உசாத்துனை நூல்கள்:

டாக்டர். முத்துச்சண்முகம், இக்கால மொழியியல், சென்னை, 1191.

கி. கருணாகரன், வ. ஜெயா, மொழியியல், சென்னை, 1997.

HOCKETT. F. CHARLES, A COURSE IN MORDERN LINGUISTIC, NEW YORK, 1958.

பாரதியும் மேல் நாட்டுக் கவிஞரும்

"பாரதியும் மேல் நாட்டுக் கவிஞரும்"


வாழையடி வாழையென வரும் தமிழ்ப் புலவர்களிடத்திலே தானுமொருவனென உரிமை பாராட்டிக் கொண்டவர் பாரதியார். இவர் இளங்கோஇ கம்பன், வள்ளுவன், ஒவை, தாயுமானவர், இராமலிங்க சுவாமிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் முதலிய பழந்தமிழ்க்கவிஞர்களையும் பண்டைய வேத முனிவரையும் காளிதாசன் போன்ற வட மொழிக் காவிய கர்த்தாக்களையும், இரவிந்தரநாத்தாகூர் பேன்ற சமகால இந்தியக் கலைஞர்களையும் ஆவர்தோடு சுவைத்தவர்.

திறமான புலமைக்கு எப்பொழுதும் தலைவணக்கம் செய்தவராவார் பாரதியார்.

ஆங்கிலக் கல்வியென்னும் பெயரிலே பேடிக் கல்வியை தனது காலத்து இளைஞர் பெறுகின்றனர் என உள்ளம் நொந்தார். இதனை “சுயசரிதை” என்ற பாடலிலே ஆங்கிலக் கல்வியின் விளைவாக,

செலவு தந்தைக் கோராயிரம் சென்றது
தீதெனக்குப் பல்லாயிரஞ் சேர்ந்தன
நலமோ ரெடடுணையுங் கண்டிலேனிதை
நாற்பதாயிரம் கோவிலிற் சொல்லுவேன்


என்று ஆவோசத்துடன் பாடினார். இவர் பள்ளிக் கூடங்களிலே அன்று கானப்பட்ட பாடத்திட்டத்தினைக் கூறினாரேயன்றி ஆங்கிலக்கல்வியைன்று. இதற்கு எடுத்துக் காட்டாக

“ சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - சுலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”


என்று பாடியுள்ள புலவன் எத்தனையோ மொழிகளிலிருந்து தனக்கு ஊக்கமும் ஆக்கமும் தேடிக் கொண்டான். பாரதியின் கருத்தாக இங்கு வெளிப்படுவது பிற மொழிகளின் காவியங்களிலிருந்து ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் கானவேண்டும் என்பதே.

உதாரணமாக ஜப்பானியக் கவிதை என்ற தலைப்பிலே எழுதிய கட்டுரையிலே உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியக் கவிஞரின் கருத்துக்களையும், அமெரிக்கா பெண்பாற்புலவர் மிஸ் ரீஸ் என்பவர்களது கவிதைகளையும் மனமாரப் போற்றுகின்றார்.

மேற்படியான கவிஞர்களின் கவிதைகளை திரும்பத் திரும்ப மனப்பாடம் செய்ய வேண்டும் என்கின்றார். இவை படிப்பவனுடைய அனுபவத்துக்கு ஏத்த வகையிலே அதிலிருந்து நூறு வகையான மறைபொருட்கள் தோன்றுமென்கின்றார்.

இப்படியாக மேல் நாட்டுக் கவிஞர்களைப் புகழ்ந்து வி;ட்டு தமது மொழியை நினைத்துக் கொள்ளும் போது நமக்குள்ளே திருக்குறள் சுட்டிக்காட்டுகின்றார்.

“ கடுகைத் துளைததேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்”

என்று கூறியவாஇ; பிற மனத்தோடு ஒரே அடியாக கவிதை சுருங்கியே போய்விட்டால் நல்லதன்று.. எனவும் கூறுகின்றார்.

“ எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு.”

இவ்வாறு எவ்வளவு உயர்ந்த கருத்தாயினும் அதனைத் தனது அளவுகோல் கொண்டு மதிப்பிட்டே ஏற்றார் பாரதியார்.


இந்த அடிப்படையிலேதான் சில மேல்நாட்டுக் கவிஞர்களையும் ஒப்புநோக்கிப்பார்த்தால்...

 பாரதியார் வாழ்ந்த காலத்தில் தமிழகம் தாழ்வுற்றுஇ வறுமைமிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டு, பாழ்பட்டு நின்ற பாரத நாட்டை வாழ்விக்க வேண்டுமென துடித்தவர்.

 அந்த மனநிலையிலே தேசப்பற்று, விடுதலை வேட்கை, புதுமை மோகம் பேன்ற வேட்கை கொண்டவர்களை தேடிச் சென்று பேற்றினார்.

 அந்த வகையிலே அவ்வுணர்ச்சிகொண்;ட மேல் நாட்டுப்புலவர்களை கவர்ந்ததில் வியப்பெதுவுமிருக்காது எனத்தான் கூறவேண்டும் என பேராசிரியர் கைலாசபதியவர்கள் கேள்வியொன்றை எழுப்பியுள்ளார்

 அந்தவகையிலே பேராசிரியர் பாரதியைக் கவர்ந்த மேனாட்டுப் புலவர்களை தொகுத்துக் காட்டும் போது ஏழு புலவர்களைக் கூறுகின்றார்.

 அமெரிக்காக் கவிஞர் வால்ட் விட்மன்
 பெண்பாற் புலவர் மிஸ் ரீஸ்;
 ஆங்கிலக் கவிஞர்களான
 செல்லி
 பைரன்
 கீட்ஸ்
 வேட்ஸ் வர்த்து
 பேல்ஜியக் கவிஞரான எமில் வெர்~ரேன்.

மேல் நாட்டுக்கலைஞர்கள் பற்றிய விபரம்:

1. அமெரிக்காக் கவிஞர் வால்ட் விட்மன் ( 1819 - 1892 )

 இவர் அமெரிக்காவின் தலையாய சனநாயகக் கவியாவார்.
 இவரைப் பாராட்டாத இலக்கியக் கலைஞர்களே இல்லையென்றே கூறலாம்
 குடியாச்சி, ஆண் பெண் சமத்துவம், விடுதலை ஆகிய பண்புகளைக் கொண்டவர்.
 இவர் பிறந்தது லோங்ஜலன்ட் என்னும் இடத்திற்கு அமெரிக்க இந்தியர் இட்ட பெயர் போமாநோக்.

விட்மனுக்கும், பாரதிக்கும் “உள்ளக்கலப்பு” ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

 இருவரின் வாழ்க்கையிலும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

- இளமையிலே கவித்தாகம்
- ஒழுங்கற்ற கல்வி
- நிலையற்ற சீவியம்
- ஆசிரியத் தொழில் (பத்திரிகைத் தொழில்)
- குமூக அரசியல் வேகம்
- பிரசார முயற்சி
- வேதாந்தப் பற்று விட்மனுக்குஇ பாரதியோ வேதாந்தக் கனி.

இதனால் பாரதி விட்மனை “மகான்” என எழுதியதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை என்கிறார் பேராசிரியர்.

 அமெரிக்காவை கற்பனையிலேயே கண்டுகளித்த விட்மன் “பாரத நாடு” , “பாரத தேசம்” முதலிய பாடல்களைப் பாடிய பாரதியைக் கவர்ந்தார் என்பதற்கு நிரம்பிய ஆதாரங்கள் இருக்கின்றன என்கின்றார் போராசிரியர்.
 இதனைப் போல பாரத தேசம் என்னும் பாடலிலே பாரதி
 வெள்ளிப் பனிமலை
 சேது சதுக்கம்
 சிந்து நதி
 சேர நன்னாடு
 சுந்தரத் தெலுங்கு
 சிங்கமராட்டியர்
 ராசபுதனம்


என்றெல்லாம் அடுக்கிக் கொண்டு போகும் போது விட்மனுடைய செல்வாக்கை தெளிவாகக்கான முடிகின்றது.

 இதனைப் போலவே தாயின் மணிக்கொடி என்ற பாரதியாரின் பாடல் வைகறையிலே கொடிப்பாட்டு ( Song of the Banner at Daybreak) என்ற விட்மனுடைய பாட்டுக்கு இயைபுடையதாகக் கானப்படுகின்றன.

 விட்மனின் சனநாயகப் பாட்டுக்களும் பாரதியைக் கவர்ந்திருக்கும் என்பதில் ஜயமில்லை.

 வசன நடைக்குத் தந்தையே விட்மன் என்கின்ற வகையிலே கவிதை வடிவிலேயும் கவிதையின் பொருளிலும் விட்மன் பாரதியைக் கவர்ந்தார்.

 பெண்மையைப் போற்றுவதிலும் விட்மனும் பாரதியும் கருத்தெற்றுமை உடையவர்கள்.

“ தாயினுஞ் சிறந்ததெதுவுமில்லை எனக் கூறுகின்றேன்” என்றான் விட்மன்.

“ பெற்றதாய் நற்றவ வானினும் நனி சிறந்தவள்” என்பது பாரதியின் வாக்கு.

 மேல் நாட்டுக் கவிஞன் பெண்ணை மிக உயர்வாகப் பேசியது பாரதியைக் கவர்ந்து உற்சாகப் படுத்தியது என்பதில் ஜயமேயில்லை.


பற்பல ஒற்றுமைகள் கானப்படினும் வேற்றுமைகள் என்ற வகையிலே பார்ப்போமானால்

 சனநாயக வாதியாக வாழ்ந்த விட்மன் யாப்பு பழமையின் சின்னமென யாப்பில்லாது எழுதினான்.

 நவீன இலக்கியத்தில் உரைநடைக்கும் செய்யுளுக்கும் வேறுபாடு இருக்கக் கூடாது என்பது விட்மனின் கொள்கை.

 பாரதியின் கவிதை “வசனக் கவிதை” எழுதியுள்ளானெனிலும் அதனை தலைசிறந்தது என கொள்ளவில்லை.

 பாரதியின் கவிதைகள் வேத கீதங்களை ஊற்றாகக் கொண்டது. அளவோடு பயன்படுத்தப் பட்டது. விட்மனைப் போல கண்மூடித்தனமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் யாப்பை உதறித்தள்ளவில்லை.

 பாரதியார் பழைய பா வகைகளைப் போதியளவு கையாண்டுள்ளார்.

 புதிய செய்யுள்வகைகளைப் பயன்படுத்தி வெற்றி கொண்டானே தவிர யாப்பை ஒரு விலங்காக் கொள்கவில்லை.

 இவைதான் அடிப்படை வேறுபாடுகளாக விட்மனுக்கும் பாரதிக்கும் காணப்படுகின்றது.


பாரதியைப் பெறுத்த வகையிலே “ பாட்டுத்திறத்தினாலே இவ்வையகத்தைப் பாலித்திட வேண்டும்” என்பது இவரின் செயலாகும்.

இதனால் வண்டிக்காரன் பாட்டிலிருந்து குடுகுடுப்பைக் காரனின் பாட்டுவரை பாடித்தீர்தான்.

ஆனால் விட்மன் தனது செந்த ஆத்ம திருப்திக்காகக் கொண்டான்.

 கவிதை உரைக்கப் பாடுவதற்கன்றி, ஊனக் கண்ணாற் பார்த்து மனத்துக்குள் படித்துச் சிந்திப்பதற்கு என நம்பினான்.

 விஞ்ஞானம், சமுதாயம் ஆகியவற்றைப் பற்றி ஆழமாகவும் விரிவாகவும் கவிதையிலும் எழுதுதல் வேண்டும் என்பது விட்மனின் கருத்து.

 பாரதியோ நாயன்மாரின் தேவாரங்களிலிருந்து நாடோடிப் பாடல்கள் வரை கட்டமைதியுள்ள யாவற்றையும் தனித்தனியாகப் பரீசீலனை செய்தான்.


இப்படியான செயல்களும் பிற காரணங்களும் பாரதியை விட்மனிலும் சிறந்த உயர்ந்த கவிஞனாகின.

அடுத்து பாரதியினோடு பேராசிரியர் ஒப்பிடுவர் யந்திரப் புரட்சியையும் வளர்ச்சியையும் வரவேற்ற புலவன் எமில் ஹெர்ஹரேன் ( 1855 – 1916 ) என்னும் பெல்ஜிய நாட்டுக் கவிஞர்.


 கவிதைக்கு உரிய பொருள் இனியதும், நல்லதும் என்ற மரபுணர்ச்சியின் காரணமாகக் காற்றையும், வானத்தையும், வயலையும், மதியையும், குளத்தையும், பெண்ணையும், காதலையுமே புலவர்கள் திரும்பத் திரும்பப் பாடிவந்தனர்.

 இந்த நிலையிலேதான் மேற்கு நாகரீகத்தின் விளை பொருள்களான யந்திரங்கள், ஆலைகள், கப்பல்கள் ஆகியவற்றையும் அழகுப் பொருள்களாகக் கொண்டு நகரத்தைப் பாடினார் எமில் ஹெர்ஹரன்.

 அந்த வகையிலே அவர் முன்னோடிதான். இந்த வகையிலே பாரதிக்கு கவிஞரது பொருள் மாற்றம் பிடித்துக் கொண்டது.

 எமில் என்பவரின் கொள்கை யாதெனில்…. “வலமையே அழகு….” ( பக்கம் 225)

“ வலிமை விலிமை என்று பாடுவோம்….”

“ இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
யத்திரங்கள் வகுத்திடுவீரே.”

“ ஆயதஞ் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்.”


பாரதியார் எட்டையபுரத்திலே இருந்த காலத்திலே செல்லிதாசன் என்பது பாரதியின் இளமைக் காலப் புனை பெயராகவே இருந்தது. “செல்லி கிளப்” ஒன்றுகூட நடாத்தினார் பாரதி.

அடிமை, மிடிமை, மடமை, வறுமை முதலியன என்ன வடிவில் எங்கிருந்தாலும் அவற்றை உடைத்துத் தகர்த்தெறியத் துடித்த அராஜகக் கவிஞன் செல்லி.

பெண்களின் விடுதலையிலும் செல்லியின் ஈடுபாடு இருந்தது.

மனிதன் சுகந்திரப் பிறவியாய் துலங்க வேண்டும் என்பது செல்லியின் கனவு. விடுதலையின் சங்கநாதம் முழங்கவேண்டுமென்று பாடியவன் செல்லி. செல்லியின் தாரக மந்திரம் அதுவாகவே இருந்தது.

பாரதியும் பல இடங்களில் செல்லியின் வாக்கியங்களை உள்வாங்கித் தனதாக்கிக்கிப் பாடியுள்ளார் என்றுதான் கூறத்தேன்றுகின்றது.

எடுத்துக்காட்டுகள்: பக்கம் 227 ( நடுப் பகுதியில் அமைந்திருக்கின்றன)

காவியங்கள் : கட்டறுந்த புரொமத்தியஸ் : ( Prometheus Unbound ) மானிடத்தின் வெற்றியைக் கூறவெழுந்த மகத்தான நவகாவியம். பக்கம்: 228

கற்றாரைக கற்றார் காமுறுபது போல கவியுள்ளம் தனது இனத்தைத் தேடிக் கண்டு கொள்கின்றது. இது இயற்கைதானே என்கின்றார் பேராசிரியர்.

பைரன்: ( 1788 - 1824 )

• இவர் செல்லியின் நண்பர்.

• செல்லியை விட கூடிய சமுதாயப் பற்று கொண்டிருந்தார்.

• அவரது காலத்தில் கானப்பட்ட முரண்பாடுகளையும், கொடுமைகளையும் கண்டு கொதித்தெழுந்த தேசியக் கவி.

• கிரேக் நாட்டின் விடுதலைப் போரின் பங்கு பற்றி அந்நாட்டிலேயே புகழிடம் பெற்றார்.

• பிரபுத்துவக் குடும்பத்திற் பிறந்து சயநாயகவாதியாக மாறறியவன்.

• பார்பனக் குடும்பத்திலே பிறந்து பறையருக்கும், புலையருக்கும் பள்ளுப் பாடிய பாரதிபோல, பைரன் மேற்கத்திய நாகரிகத்தின் கருவூலமாகிய கிரேக்கம தேசம் அந்நிய வசப்பட்டு அதன் புராதனப் பெருமையிழந்து நலிந்திருந்ததைக் கண்டு ஏங்கினான்.

( Don Juan) என்னும் காவியத்தில் வரும் Isles of Greece என்னும் செய்யுட்கள் பண்டை நிகழ்சிகளை மனத்திரையிற் கானும் பாடல்கள். இவை பாரதியின் “எந்தையும் தாயும்” என்று தொடங்கும் பாடல் பெருமளவிற்கு சாயலைப் பெற்றிருக்கின்றது என்கின்றார் பேராசிரியர்.

முன்னர் நாடு திகழ்ந்த பெருமையையெண்ணி பைரன் பாடிய பாடல்கள் போல பாரதியின் சில பாடல்கள் இருக்கின்றன என்கின்றார் பேராசிரியர்.

அவையாவன:

• எங்கள் தாய்
• பாரத மாதா
• பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி

பைரனின் Child Harold’s Pilgrimage என்னும் நெடும் பாடலிலே இத்தாலி, கிரீஸ் ஆகிய நாடுகளைப் பற்றி பைரன் கூறுமிடங்களில் அச்சொற்கள் நீக்கிவிட்டு இந்தியா என்னும் பதத்தை வைத்துப் பார்த்தாலும் பொருந்தும் என்பது பேராசிரியர்.

எடுத்துக் காட்டு : “எந்தையும் தாயும்” என்று தொடங்கும் பாடலிலே

கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே

என்பது போன்ற அடிகள் னுழn துரயn என்னும் காவியத்திலே வரும் Isles of Greece “கிரேக்கத் தீவுகள்” என்னும் பாடலிலே

“ கிரேக்கத் தீவுகளே! சஃபோ காதலித்துப் பாடி,
மகிழ்ந்ததும் உம்மீதே… ( பக்கம் 229)


என்று பைரன் பாடும் பாடலில் நேரடியாகக் காணப் படுகின்றது.


ஜேன் கீட்ஸ் ( 1795 – 1821 )

 ஆங்கில ரொமாண்டிக் கவிஞருள் தனி;தன்மை வாய்ந்தன்மை வாய்ந்தன்.

 “ பிரிவுத்துயரின் பிறவிக் கவிஞன்” எனப் பாரட்டப் பெறும் கீட்ஸ் இளங் கவிஞர்களுக்கு நித்திய புருசனாக இருந்திருந்திருக்கின்றார்.

 குறகிய வாழ்நாளிலே ஆழமான வாழ்க்கைத் தத்துவம் ஒன்றை வகுத்துக் கொண்டவர் கீட்ஸ்.

 பொதுவாக கீட்ஸ் என்றவுடன் நினைவுக்கு வருவது “ Beauty is truth, truth beauty” என்னும் பாடலடியாகும். Ode on a Grecian urn கிரேக்கத் தாழியொன்றின் மீது இப்பாடலடியைக் கொண்டுள்ளது.

 இக்கோட்பாட்டிற்கு அமைய பாரதி ஞானாதாரம் என்ற வசன காவியத்தில் இக்கோட்பாட்டை எடுத்துக்கூறி விளக்குகின்றார்.

 “ஓர் ஞானி” என்று குறிப்பிடுவது கீட்ஸ்த்தான். ( பக்கம் 231 )

 அழகை ரசிப்பதற்கு பாரதியார் யாரிடமும் பாடங்கற்கத் தேவையில்லை. சத்தியம், சுந்தரம், சிவம் போன்ற கோட்பாட்டை உணர்ச்சி பூர்வமாக தெரிந்திருந்தார்.

 அதீத வறுமை காரணமாகவும் மடமை காரணமாகவும் இந்திய எழுத்தாளரும் கவிஞரும் அழகுத் தத்துவங்களை அடியோடு மறந்திருந்தக் கண்ட பாரதி, அழகுத் தத்துவங்களை ஆணித்தரமாக மேல் நாட்டுக் கவிஞர்களின் காரணமாக இருந்திருக்கின்றனர்.

 இதனை பாரதியார் “கர்மயோகி” பத்திரிகையிலே எழுதியிருக்கின்றார்.
( பக்கம் 231 )

“அழகுத் தெய்வம்” என்ற பாடலும் நினைவுகோரவேண்டியதுவாகும்.

 கீட்ஸ் பாடிய “இராக்குயில் பாட்டு” ( Ode to Nightingale ) பாரதியின் குயிற்பாட்றிற்கு அடியெடுத்துக் கொடுத்திருக்கலாமென்பது பலரது அபிப்பிராயம்.

 சொல்லாட்சியிலும் பொருளாட்சியிலும் சில குறிப்பிடத்தக்க உண்மைகளிருக்கின்றன.

“ அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே
பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்
வீற்றிருந்ததே….” ( பக்கம் 232 )

இது கீட்ஸ் எழுதியவற்றின் நேரடி மொழி பெயர்ப்பே என்று கருதுமளவிற்கு ஒற்றுமையுடையதாகக் காணப்படுகின்றது. இதனை விட கீட்ஸ் எழுதிய குயிற்பாட்டை மட்டுமின்றி அவனது உயிரோவியமான (Endymion) எண்டிமியோனையும் பாரதி படித்திருக்க வேண்டும்.

குயில் கூறுவதைப் போல காதலின் உயர் தத்துவத்தை “ காதலே அழகு, அழகே காதல்” என்பதை கீட்ஸ் பாடிய காவியத்தில் எண்டிமியோன் தனது சகோதரி பிளோனாவிடம் தான் கண்ட அற்புதக் கனவைக் கூறுகின்றான்.

பாரதியும் குயிற்பாட்டிலே கனவிலே கண்ட குயிற்பெண்ணைத் தேடி நிற்கின்றான்.

“ விந்தைச் சிறுகுயிலைக்
காணநான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன்
கோணமெலாஞ் சுற்றிமரக் கொம்பையெல்லாம் நோக்கி வந்தேன்..”

எனப் பாடும் பொழுது முற்கூறிய தேடுதல் தெரிகின்றது. இந்த இவ்விருவரின் குயிற்பாட்டின் முடிவொத்த தன்மையிருப்பதைக் காணலாம்

கீட்ஸ் முடிக்கின்றார் :

“மானதக் காட்சியோ, பகற்கனவோ?
கானம் முடிந்நது: நான் விழிப்போ, உறக்கமோ!”

பாரதியார் முடிக்கையில் :

“ சூழ்ந்திருக்கும் பண்டைச்சுவடி, எழுதுகோல்,
பத்திரிகைக் கூட்டம், பழம்பாய் - வரிசையெல்லாம்”


இவைகளைப் பார்கின்றபோது கீட்ஸ்ன் பாடல்கள் பாரதியின் குயிற்பாட்டில் பிரிக்க முடியாத இரண்டறக் கலந்துள்ளன என்று கூறத் தோன்றுகின்றது.

குயிற்பாட்டில் வரும் மாமரத்தோப்பு வெறும் கற்பனையல்ல. (பக்கம் 234)

இதனைப்போலவே வேப்பமரம் என்ற கதையில் ஒரு கனவு கான்கின்றார். வேப்பமரம் கனவிலே கதை சொல்லுகின்றது. இக்கதை முடிவடையும் போது

“ கண்ணுக்குப் புலப்படாத மறைவிலிருந்து ஓராண் குயிலும் ஒரு பெண் குயிலும் ஒன்றுக்கொன்று காதற் பாட்டுக்கள் பாடிக் கொண்டிருந்தன.” (பக்கம் 234)

மொத்தமாகப் பார்க்கும்போது குயிற்பாட்டின் உருவாக்கத்தில் கீட்ஸ் எழுதிய எண்டிமியோன், இராக் குயில்பாட்டு முதலியனவும் பிறபாடல்களும் பங்கு கொள்கின்றன என்பதை மறுக்க முடியாது. பிற கவிஞரைப் போலவே கீட்ஸ்யும் பாரதி தனதாக்கி தமிழ் மயப்படுத்தி உருமாற்றம் செய்து விடுகின்றான். ஆனாலும் ஒப்பு நோக்கும் போது மூலத்தின் அழுத்தமான சாயல் தெரிகிறது.


டெனிசன் (1809 – 1892)

 சென்ற நூற்றாண்டின் புகழ்மிக்க ஆங்கிலக் கவிஞன்.

 ஆங்கில அரசரவைப் புலவராக இருந்தவர்.

 இவரின் நண்பர் இறந்தபோது அவர் பிரிவாற்றாது பாடிய “இன்மெமோரியம்” என்ற இரங்கற் பாக்கோவையைப் பாரதியார் ஈடுபாட்டடன் படித்திருக்கின்றார்.

 துன்பமும் அறியாமையும் நிரம்பிய புத்தாண்டை “போ போ” என்றும் ஆனந்தமும் அறவொளியும் நிரம்பிய புத்தாண்டை “வா வா” என்றும் பாடினார்.

 பாரதி பாடிய “ வலிமையற்ற தோளினாய் போ போ” என்று தொடங்கும் பாடலின் மூலம் இதுவே.


“ நமது பாட்டு மின்னலுடைத்தாக்குக, நமது வாக்கு மின்போலிடித்திடுக” என கூறிய பாரதியை, இருபதாம் நூற்றாண்டின் உலகக் கவிஞருள் ஒருவராக அவர் கற்றுச் சுவைத்துத் தனதாக்கிக்கிய பிறமொழிக் காவியங்களும் உதவின என்பது உண்மை.

செல்லியும் பைரனும் ரொமாண்டிக் கவிஞர்களின் தலைமக்களாவார்.

“ இவ்வாறுதான் கவிப்பொருளும் அமைந்திருத்தல் வேண்டும்” என்ற நேழஉடயளளiஉயட ஏற்பாட்டையெதுர்த்து தனது சமய உணர்வை உரைக் கல்லாக் கொண்டு முனைப்பாகப் பாடியவர்கள்.

பாரதியும் “பொருள் புதிது, சுவை புதிது” என்று தன்முனைப்புடயனேயே பாடியவன். அந்த வகையிலே பாரதிக்கும் அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.

பாரதியைப் பொறுத்தமட்டில் தன்னுனர்ச்சிக் கவி என்றே கூற வேண்டும்.
பின் நோக்கிப் பார்கின்ற போது பாரதி இன்னுஞ் சிறிது தீவிர வாதியாக இருந்திருந்தால் கூடிய நலன் விளைந்திருக்கும் என்றே தோன்றுகின்றது.

பாரதியையும் மேனாட்டுக் கவிஞர்களையும் ஒப்பு நோக்கும்போது முடிவாக பாரதியின் பலமும் பலவீனமும் தெளிவாகின்றன.

பின் குறிப்பு:

பேராசிரியர் கைலாசபதி அவர்களின் நூலில் இருந்து ஒப்படைக்கு எழுதியது. ஒப்பிலக்கியம் என்ற நூல் துணையும் மூலமுமாகின்றது.

Friday, December 14, 2007

இவள் கதை தொடரும்.....

றைக்குள் சென்று கதவை பூட்டிவிட்டு கட்டிலில் அமர்ந்த பாமாவின் கண்கள் கலங்கியிருந்தன. தனக்குள்ளே இருக்கும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்த அந்த கண்ணீரால் மட்டும்தான் முடியும் என அவளுக்கு தெரியும். தனது உயிரை நீத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

இரண்டு முறை தற்கொலை முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவள் பாமா. திருமணத்திற்கு முன் தனது காதலை அடையமுடியாமலும் தன் தந்தையின் பிடிவாத்திற்கு ஏற்ப திருமணத்தை ஏற்றுக் கொண்டவள். பதினேழு வயதில் தன்காதலை வெளிப்டுத்திய பின்னரும் தந்தை தன்னை தற்கொலை செய்து கொள்ளுவேன் என வெருட்டியதாலும் வேறு வழியின்றி வெளிநாட்டு சம்பந்த்ததை ஏற்றுகொண்டு வாழ்கின்றாள். தனது கணவன் விமல் தன்னைவிட பதினைந்து வருடங்கள் மூத்தவர் என்பதை தெரிந்து தன்னை போக்கிக் கொண்டாள் தான் இதற்கு ஒரு முடிவாகும் என நினைத்து விஷம் அருந்தி பின் தற்செயலாக காப்பாற்றப்பட்டவள். தனியாக வொளிநாடு வந்த அவளுக்கு ஆறுதாலாக பேசிப்பழக அவளின் கூடப்பிற்ந்த அண்ணண், அண்ணியை விட வோறு எவரும் இருக்கவில்லை. வெறுப்புடன் கனடா வந்த அவளுக்கு கணவனே துணை என நம்பியிருந்தாள். தன்வாழ்வில் கற்பனையோடு வாழ்ந்த பள்ளிப் பருவங்களில் தனது கணவன் எப்படி எல்லாம் வரவேண்டும் என ரமணிச்சந்திரனின் கதைகளை வாசித்து கற்பனையில் வாழ்ந்த அவளுக்கு இதுவோர் போரிடியாக அமைந்தது. அந்த வாழ்கையின் கனவைவிட்டு நியத்தில கணவனுடன் விருப்பு வெறுப்புக்களுடன் வாழ்ந்து மூன்று ஆண்பிள்ளைகளை பெற்று வாழ்ந்து வருகின்றாள்.

திருமணமாகி பன்னிரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன. நித்தம் கணவனின் சந்தேகங்களும் சண்டைகளும் அவளின் மனதில் ஓர் மனஅழுத்தமாகவே பதித்துவிட்டது. இப்போது அவள் வாழ்வது எல்லாம் தன் தாய்கும் தனது பிள்ளைகளுக்கும் மட்டுமே. பாமா பொறுமையேடும், பொறுப்புணர்வோடும் நடந்து கொண்டிருக்காவிடில் என்றோ அந்த குடும்பம் நடுத்தெருவில் நின்றிருக்கும். இவ்வாறு அவள் சிந்தனையில் மூழ்கியிருந்தாள். பக்கத்திலிருந்த கைத்தொலைபோசி அவளை அழைத்தது. “அம்மா.. இன்னும் வந்து எங்களை ஏத்தலையா..பள்ளிக்கூடம் முடிந்து வெளியால் Wait பண்ணுறம்…” பிள்ளையின் அழைப்பைக் கேட்டவுடன் அவள் தீடீரென தன்னை நிலைப்படுத்திக்கொண்டு காரில் பிள்ளைகளை ஏற்ற செனறாள். வாகனம் ஓட்டும் போதெல்லாம் தன்னை விபத்தில் மாட்டிக்கொண்டு சாகடிக்க வேண்டும் எனவே நினைத்துக் கொள்வதும் உண்டு. எத்தனையோ நாட்கள் அழுதபடியே காரை ஓட்டிச் சென்றிருக்கிறாள். அவள் வாழ்வில் நடந்த விடயங்களை அவள் அசைபோடும் போதெல்லாம் நான் ஏன் இன்னும் உயிருடன் வாழ்கின்றேன் எனத்தான் நினைப்பதும் உண்டு. இவ்வாறு நினைக்கும் போதெல்லாம் தன்னை தற்கொலை செய்து கொள்வதே வழி என நினைத்தது ஏதாவது செய்து கொள்வாள்.

திருமணம் நடந்து கொஞ்ச நாட்களில் ஒரு முறை தன்கையில் கத்தியால் வெட்டிக் கொண்டதும் உண்டு. கணவன் தனது நண்பர்களுடன் வெளியால் சென்று சந்தோஷமாக இருந்து தண்ணி, கூத்து என முடித்தது வீட்டிற்கு வரும்வரை சமைத்தது விட்டு கணவனுக்கா காத்திருப்பாள். கணவனுக்கு தான் ஆசையாக சமைத்வற்றை சாப்பிடுவதில்லை என்ற ஆத்திரத்தினால்தான் அவள் ஒருமுறை தன் கையை வெட்டிக் கொண்டவள். “நான் அவரை நம்பித்தனே கனடா வந்தனான்…..வேறு யாரு இருக்கினம் எனக்கு….அவரும் என்னில் அன்பு வைக்காட்டி….நான் ஏன் இப்படி இருந்து…” என நினைத்து பல நாட்கள் கலங்கியிருக்கிறாள். இதனைவிட பல கேவலமான விடயங்கள் தனக்கும் கணவனுக்கும் இடையில் நடந்ததை வெளியால் சொல்முடியாது தவித்து கொண்டிருந்தாள். தனக்கு இருக்கிற ஒரே ஒரு ஆறதல் தன் தாய் மட்டுமே, ஆனால் தன்தாய்க்கு தன்னைப்பற்றிய விடயங்களை சொல்லி தாயின் ஆயுளை குறைத்துவிடுமோ என பலவிடயங்களை சொல்வதில்லை. பாமாவிற்கு தன்தாயை பிடித்தமைக்கு பல காரணங்கள் உண்டு. அவள் சிறுவயதில் இருந்து தன் தாயைவிட்டு பிரிந்து வாழ்ந்தவள். அவள் தனது வீட்டில் செல்லப்பிள்ளை வேறு. மூன்று ஆண் சகோதரர்களுடன் பிறந்து வாழ்ந்தவள். பாமா, கவர்ச்சியான பெண் வேறு. ஒரு தடைவ பார்த்த அவளை மறுதடவை பார்க்க வைக்கத்தூண்டும் கவர்ச்சி அவளிடம் நிறையவே இருந்தது. வயதுக்கு மீறிய வளர்ச்சி. இவளை கோவில் திருவிழாக்களில் பல ஆடவர்கள் பின்தொடர்ந்து போய் செருப்பினால் அடிவாங்கியும் உள்ளனர். இவளுக்கு கொடுத்துவிட்ட பூவை திருப்பி காதில் வைக்கும் படி திருப்பிக் கொடுத்தும் இருக்கிறாள். அவளிடம் ஆடவர்கள் மனதை பறி கொடுத்ததில் தவறே இல்லை. அவ்வளவு அழகான பெண்.

இவ்வாறெல்லாம் தனது குறும்புத்தனங்களைத் தனது இளம் வயதினில் பாடசாலை நாட்களில், கோவில் திருவிழாக்களில் என செய்தவள். இவ்வாறெல்லாம் செய்த பாமாவிற்கு இப்போதை வாழ்க்கையை நினைத்துப்பார்த்து கவலை கொள்வதுண்டு. தனக்கு காதல் கடிதம் தந்க சகமாணவார்களைக் திருமணம் செய்திருந்தால் சிலவேளைகளில் நன்றாக வாழ்ந்திருப்பேன் என நினைத்துக் கொள்வாள். தான் வாழ்கின்ற இந்த வாழ்க்கை என்பது தான் தன்கனவுகளை விட்டு வாழ்வதுபோன்றே கருதினால். தான் அந்த சகமாணவருக்கும், வாலிபருக்கும் செய்த பாவங்களுக்கும் குறும்புகளுக்கும் எல்லாம் சேர்த்துத்தான் இப்ப அனுபவிக்கின்றேனோ எனவும் நினைத்துக் கொள்வாள். தனது தாயிடம் பேசும் போதெல்லாம் தனக்கு நேர்ந்த சில விடயங்களை கூறி தன்னை ஆறுதல் படுத்துவாள். தாயிடம் ஒரே ஒரு விடயத்தை மாத்திரம் ஒவ்வொரு முறையும் கூறுவது உண்டு. “என்னை ஏனம்மா வேளைக்கு கட்டிக் கொடுத்தனி…நான் அங்கேயே செத்துப்போயிருக்கலாம்…ஏன்தான் உயிரோட இருக்கிறேனோ தெரியலை…” இவ்வாறு கூறம் போது தாயும் தான் விட்ட பிழையை உணர்ந்து அழுவாள். இருந்த போதிலும் புரையோடிப்போன தமிழர் பண்பாட்டு வழக்கத்திற்கு ஏற்ப கணவணுடன் சேர்ந்த வாழ் என்றே தாயும் கூறிக்கொள்வாள். பாமாவிற்கு திருமணப் பேச்சு நடைபெறும் போது தனது தாயிடம் தனது காதலை வெளிப்படுத்திய பின்னர் தாய் தனது மகளின் காதலைச் சேர்த்து வைக்க பல முயற்சிகள் எடுத்து தோற்றுப்போனாள். தன் கணவனின் பிடிவாத்தினால் பாமாவின் திருமணம் அவசரஅவசரமாய் முடிந்தேறியது. திருமண பதிவு முடிந்தமையினால் அவளாளும் என்ன செய்யமுடியும். தகப்பனும் தன் கடமையை செய்வதாக எண்ணி வெளிநாட்டு சம்பந்தம் என்றபடியால் வயது வித்தியாசம் பாக்காமல் கட்டி அனுப்பிவிட்டார். நாட்டுநிலலைமயும் போர்க்காலச்சூழலும் இத்தகையதொரு முடிவிற்கு இட்டுச்சென்றது. பதினேழு வயிதில் கனடா வந்தபோது தன் கணவன் தன்னை தனது உடல் சுகத்திற்கு மட்டும் பயன் படுத்திக் கொண்டதை நினைத்து நினைத்து தன்குள்ளேயே அழுது கொள்வாள்.

முதலிரவின் போது தன் சொந்தங்களை, உறவுகளை விட்டு புதிதாய் திருமணமான கணவனுடன் தனித்து, அந்த உறவுகளைப் பிரிந்து வந்திருக்கின்றேமே என அழுதபடி இருந்த அவளை, தன் கணவன் ஆறுதல் படுத்துவான் எனத்தான் நம்பினாள். ஆனால் தனது சுகத்தை அனுபவிப்பதற்கா அவளை அடித்துப்போட்டுவிட்டு தன்னை சுகப்படுத்தியதை நினைத்தால் அவளால் பொறுக்கமுடியாது. “அவனுக்கு என்ன அவ்வளவு கல்மனமே?..” என பாமா எண்ணினாள்! அவள் வாழ்கையை நினைத்தால் அவள் இதயத்தில் ஆயிரமாயிரம் முட்கள் தைத்ததை போன்று எண்ணிக்கொள்வாள். கண்கள் கலங்கி நீரை சொரிந்தன. இதனைத்தான் அவளால் செய்யமுடியும்.

இவ்வாறு ஒரு பெண்ணை குறைந்த வயதில் கட்டிவிட்டோமே என்ற ஆதங்கமும் அவளின் அழகு மீது கொண்ட ஆசையும் விமலுக்கு அவளை வெளியால் நடமாட விட விருப்பமில்லை. பள்ளிக்கூடம் போக மற்றும் வேலைக்காவது போக விட அவள் வாய்விட்டுக் கோட்டும் அவளை அவன் விடவில்லை. இவள் வீட்டில் இருக்கும் போது தனது கணவனுக்கும் கணவனின் சகோதரங்களுக்கும் சமைத்து கொடுப்பாள். பொதுவிடங்களுக்கோ அல்லது உறவினர் வீட்டிற்கோ விருந்திற்கு அழைத்தால் இருவரும் போவதுண்டு. அப்படி போனாலும் அழகா வெளிக்கிட்டு போவது அவருக்குப் பிடிக்காது, அதனை அவரே அவளுக்கு வாய்விட்டு சொல்லியிருக்கின்றான். அவள் அவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு போய்யிருந்தும் அவளை “அழகாகத்தான் இருக்கிறீர்கள்….” என பலபோர் அவளைப்பார்த்து கூறியும் இருக்கின்றனர். இவ்வாறு திருமண புதுவாழ்வு கழிந்து சென்றது. முதல் மூன்று தடவை பிள்ளை தங்கவில்லை. கணவன் மீது உள்ள வெறுப்பினாலும் தன்மீது உள்ள வெறுப்பினாலும் தன் வயிற்றில் தானேயடித்து கருவைக் கலைக்க முயற்சியும் செய்தவள். நான்காவது முறை கர்ப்பமாகி ஓர் ஆண்பிள்ளையை பெற்றெடுத்தாள். அவளிற்குவிற்கு சின்னப்பிள்ளையில் இருந்து சிறு குழந்தைகள் என்றால் விருப்பம். தான் எடுத்து வளப்பதற்கு ஆசைப்படுவாள். அவளின் ஆசையின் பேரில் ஆண் பிள்ளையை பொற்றெடுத்தாள். தன்னை உடல் சுகத்திற்கு மட்டும் பயன் படுத்துவதை நினைத்து மடைதிறந்த வெள்ளம் போல் கண்களில் நீர் பெருகி வழியும். “சின்ன வயதில் திருமணம் செய்து கொண்டவர் தன்னை அரவனைத்து ஆசையாய் வைத்திருந்ததில்லை…”, “வாழ்க்கை என்பது தனி உடல் சுகம் மட்டுமா? அதற்க்கும் அங்கால் எவ்வளவே இருக்கின்றது….என்பதை இவர் ஏன் புரிந்து கொள்ளமாட்டாரா…?” என தனக்குள் ஏங்கிக்கொள்வாள். “பெண்கள் வாழ்வில் ஆடவன் ஒருவன் பிரவேசிக்கும் போதுதான் பெண்ணின் கதையே ஆரம்பிக்கும் போல் இருக்கிறது போலும்….” என நினைத்துக்கொள்வாள். முதல் பிள்ளை பிறந்தபின் தனது தாயின் தேவைக்கு பணம் அனுப்ப வேண்டும் என்ற காரணத்தினாலும் தனது சுமையை போக்காட்டுவதற்காகவும் அவளிற்கு தனது சிந்தனையை போக்காட்டுவதற்கும் தனது பொழுதைப் போக்கிக் கொள்வதற்கும் ஏதாதவு ஒரு இடத்தில் வேலைக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்தாள். Coffe shop இல் வேலை ஒன்றிக்கு சேர்ந்து கொண்டாள். அங்கே வேலைக்குப் போவதற்கு முன் தன் கணவனிடம் அனுமதி பெற்றிருந்தாள், ஆனாலும் அவனின் அரைகுறை மனதின் முடிவாய் வெளிவந்த சம்மதம் திருப்பிதரவில்லை என்றாலும் வேலைக்கு செல்ல முடிவு செய்தாள். தனது கணவனின் குணம் அறிந்து வேலையில் எவருடனும் பேசுவதை குறைத்துக்கொண்டாள். இவ்வாறு நாட்கள் கழிந்து போயின.

புதிதான ஒரு நட்பும் பாமாவிற்கு கிடைத்தது. தனது துயரங்களை பகிர்ந்து கொள்ள கிடைத்த நட்பை மிகவும் மதித்தாள். தனது நண்பண் தீபனை தனது கணவனுக்கும் அறிமுகம் செய்தாள். நட்பின் பழக்கம் நெருங்க, அவர்களின் நட்பு குடும்ப நண்பர்களாக மாறிவிட்டனர். இவனுக்காக எதையும் செய்வாள் என்ற அளவிற்கு இருவருக்கும் நட்புறவு பலமானது. பாமாவிற்காக தீபன் எதையும் செய்வான் என்ற அளவிற்கு அவர்களை அறியாத பாசவலை அங்கே இருந்தது. இவர்களின் பழக்கத்தை பொறுக்க முடியாத சக ஊழியர்கள் இவர்கள் இருவருக்கும் தொடர்புபடுத்தி கதைக்க ஆரம்பித்தனர். இதனை அறிந்தும் பாமா அவர்களின் போலிப்பேச்சை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. தீபன், அந்தப்பேச்சை ஏற்கமுடியாதவனாக இவர்களின் நட்பை விலத்தி வைக்கமுடிவு செய்துவிட்டான். தீபனால் விலத்தி வைத்த பாமாவின் நட்பை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. “மற்றவை என்ன கதைச்சால் என்ன.?...நாங்கள் பழகினது எங்களுக்குத்தான் தொரியும்.?...இதக்கூடவா தீபன் புரிந்து கொள்ளவில்லை?....” என எண்ணி எண்ணி வருத்திக்கொள்வாள். பாசச்சங்கிலித் தொடர் அன்றிலிருந்து அறுந்தது எனலாம். இதனைவிட கணவனின் நண்பர்கள் சிலர் தீபனை அணுகி பாமாவுடனான நட்பை தொடரவேண்டாம் என கண்டித்தும் உள்ளனர். தீபன் பாமாவின் கணவனின் ஆசையின் பேராலும், பாமாவின் நல் எதிர்காலத்திற்கும் தனது நட்பை விலத்தி வைத்தான். இவ்வாறு பாமா வேலை செய்யும் நாட்களில் கணவனின் அன்பு அவளுக்கு கிடைப்து குறைவாகவே இருந்தது.

இவளின் குழந்தையும் வளர்ந்து வந்து கொண்டிருந்தது, இவள் குழந்தை மற்றைய சகோதரங்களின் குழந்தைகளுடன் விளையாடுவதைப்பார்த்து குழந்தையின் ஆசைக்காக இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள பாமா ஆசைப்பட்டாள். ஆனால் கணவனிடம் தன் ஆசையை இவளே வாய்விட்டுக் கேட்டும் கணவன் விருப்பம் எதையும் தொரியப்படுத்தவில்லை. ஆனாலும் பாமா வேலை முடிந்து வீட்டைவர பதினொரு மணியாகும். பின்னர் முழுகி தன்னை தாயார் செய்து கொண்டு கணவனிடம் தனது ஆசைகளை வாய்விட்டு கேட்டு கட்டாயப்படுத்தித்தான் தனது மற்றைய பிள்ளைகளை பெற்றாள். இவ்வளவு இழிவாக நடந்து கொண்டதை நினைக்க பாமாவிற்கு “ஏன் இன்னும் உயிருடன்…பாவி நான் இருக்கிறேன்” என அவள் உள்ளம் பதைபதைக்கும். தனியாக அழுது இடிந்துபோய் ஒரு மூலையில் உட்கார்ந்து கொள்வாள்.

“பெண்ணில் தன்பிறவி கேவலமானது என்று…” பலதடவை எண்ணியிருக்கிறாள். அவளுக்கு கிடைத்த அந்த வாழ்வை எண்ணி அவள் என்ன முடிவிற்கு வருவதென்றே தெரியவில்லை. தனக்கென்ற ஒரு வட்டத்தையிட்டு வாழ்ந்து வந்தாள். அவள் கணவனின் செயல்கள் அவளுக்கு புரிவதே இல்லை. “வீட்டிற்கு உழைத்தல், பணம் சேர்த்தல் மட்டுமா வாழ்கை?..” என பலதடவை தன்னைத்தனே கேட்டு விடையின்றி உள்மனதை சாந்தப்படுத்தி இருக்கின்றாள்.

இவள் கணவனுக்கு வேறொரு ஆணைப்பற்றி கதைத்தால் கட்டிய மனைவி என்று கூடப்பார்க்காமல் “நீ அவனேட போய் படு…..” என பலதடவைகள் சொல்லியிருக்கின்றான். பாமாவிற்கு இவ்வாறான கொடிய வார்த்தைகளைக் கோட்டு பழகிப்போய்விட்டன. “கேவலம் கெட்ட வாழ்க்கை வாழ்பதைவிட சாகாமல் இருக்கிறன்..” எனத்தான் தோன்றும். இப்படித்தான் ஒருமுறை கணவரின் தம்பியின் மகள் மாலினியின் பிறந்ததினத்திற்கு சென்றிருந்தபோது, பாமாவைப்பார்த்து அங்கு வந்திருந்த உறவினர் ஒருவர் “உங்களைப் பார்க்க அப்படியே அம்மன் மாதிரியே இருக்குது….” என்றார். அன்று அவள் உடுத்திருந்தத சிவப்பு நிற சேலை வேறு. இதனை தனது கணவரிடம் விளையாட்டாகத்தான் வாய்விட்டு கூறியிருந்தாள். அதற்கு அவன் “உவங்கள் அப்படித்தான்…முன்னாலே ஒன்று பேசவாங்கள்….பின்னாலே வேறமாதிரிப் பேசுவாங்கள்….இவங்களைப்பற்றி உனக்கென்ன தெரியும்…” என எரிந்து விழுந்தான். பாமாவைப் பொறுத்த மட்டில் உடனுக்குடன் எதையும் கேட்டுவிடும் பழக்கம் உண்டு. “அப்படி யார் என்ன பேசிகினம் அப்பா?....அப்படி என்ன சொன்னவர்கள்.?..” என கணவனிடம் கேட்டாள். ஆனால் அதற்கு கணவன் எதையுமே கூறமறுத்து விட்டான்.

விமலைப்பொறுத்த மட்டில் மனைவியை எப்படியாவது குறை கூறிக்கொண்டிருக்க வேண்டும். அவ்வளவுதான். இதனைவிட விமல் தனது மனைவியை வெளியால் போவதென்றால் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டுதான் போகவேண்டும் எனவும் கூறிவைத்துள்ளான். அப்படிப்போனால் பாமாவின் தமயனுக்கு விமல், phone பண்ணி பாமாபற்றி தூற்ற ஆரம்பித்துவிடுவான். விமலின் கரைச்சல் தாங்கமுடியாமல் தமயன் பாமாவிற்கு phone பண்ணி என்னநடந்தது என கேட்டு ஆறுதல் கூறுவான். பாமாவின் தமயனுக்கு பாமாபற்றி நன்றாகத் தெரியும். “உன்னை சின்ன வயதில் கட்டிக் கொடுத்ததில் இருந்து ஒரே பிரச்சனையாகவே இருக்குது….என்ன செய்யிறது என்று தெரியலை…” என தனக்குள் ஆதங்கப்பட்டுக் கொள்வான். சில வேளைகளில் பாமா தனது கவலைகளை தன்கணவன் தன்னுடன் நடந்து கொள்ளும் முறைகளையும் முறையிட்டு அழுவாள். பாமாவிற்கு இருக்கிற ஒரே ஆறுதல் தமயன் மட்டுமே. இவ்வளவு மோசமான நிலையிலும் பாமா, “தனது பிள்ளைகளின் எதிர்காலம்தான் முக்கியம்…..அவங்கள் படித்து முடியும் வரையாவது தான் இந்த மண்ணில் வாழ வேண்டியிருக்குது….” என ஆறதல் அடைவாள்.

அவள் வீட்டில் இருக்கும் போது தனது பிள்ளைகளை பாடசாலை கொண்டு சென்று இறக்குவாள், அப்படியே பக்கத்து வீட்டு பிள்ளைகளையும் இறக்குவதனால் அவளுக்கு மாதம் நூறு டொலர்கள் கிடைக்கும். அந்தப் பணத்தை கொண்டு தனது தாய்க்கு பணம் அனுப்பிவைப்பாள். கணவரிடம் பணம் கேட்டால் ‘வெந்த புண்ணில வேல் பாய்ச்சிற வேலை..’ என்பதும் அவளுக்குத் தெரியும். சில நாட்கள் பாமாவையும் பிள்ளைகளையும் வீட்டிற்கு வரக்கூடாது என்று கூடச்சொல்லியிருக்கின்றான். “இந்தப்பிள்ளைகள் என்ன பாவம் செய்ததுவள் எங்கடை வயித்தில வந்து பிறக்கிறத்திற்கு..” என எண்ணிவருந்துவாள். இவள் தன்பிரச்சனைகளை வாய்விட்டு சில உறவினருக்கு கூறும்போது அவர்கள் இவளை குடும்பச்சிக்கல் தொடர்பான அலுவலகங்களுக்கு தொடர்பு கொண்டு பேசச் சொல்வார்கள், ஆனால் அதை இவள் விரும்புவதில்லை. இவ்வாறான செய்ற்பாடுகள் மனஅழுத்தத்திற்க காரணமாகவும் அமைய வாய்புண்டு என்பதை சில பெண்களும் அவை தொடர்பான குடும்பப் பின்னனி கொண்ட சிலரும் அறிந்து கொள்வதில்லை. இவ்வாறான செயற்பாடுகள்தான் உளச்சோர்விற்கு செய்றபட்டு பல குடும்பங்களில் தற்கொலை, மாடியில் இருந்து குதித்தல், கணவன் மனைவி தகறாறுகள் எனப்பெரிதாகி வாய்சண்டைகள் பின்னர் வீதிக்கு வரவைப்பதையும் அறியலாம். இவைகள் சில உளச்சோர்வுப் பிரச்சனைக்கு வழிவகுக்கின்றன என்பதை சில சமூகப்பிராணிகள் விளங்கிக் கொள்வதில்லை. பாமாவைப் பொறுத்த மட்டில் சில உறவினரின் விண்ணப்பத்தின்கபடி விவாகரத்து எடுத்த வாழ்வதே சிறந்து என ஆலேசனை வழங்குவார்கள். ஆனால், பாமாவினால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் விடயமாக கருதிக் கொள்வாள். தன் வாழ்க்கையில் இவ்வாறான கணவனை தான் அடைந்ததை எண்ணி எண்ணி அழுவதைத்தவிர பாமாவிற்கு வழியெதுவும் தெரியாது. தன்வாழ்வை தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக அர்பணித்து வாழ்வதே சரியென எண்ணி வாழ்கின்றாள். இவள் கதை தொடரும்.....


- முகவன் -